அரசியல் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே தேர்தலில் குதித்தேன்

71 வருட காலமாக எம்மை பிரித்து அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கும் இரண்டு பிரதான கட்சிகளை நாம் தோற்கடிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் கிட்டியுள்ளது. இது எமக்கு மிக முக்கியமான தேர்தலாகுமென தேசிய மக்கள் இயக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

திருகோணமலை, குளக்கோட்டம் கேட்போர் கூடத்தில்(31) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், எந்தவொரு நாட்டிலும் இல்லாதவாறு

நாட்டை ஆள்கின்ற 225 ஆட்சியாளர்களும் வேண்டாம் எமக்கு இராணுவ ஆட்சியே வேண்டுமென மக்கள் தெரிவித்த நாடு இலங்கை மட்டும் தான். நம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்தது இந்த ஆட்சியாளார்கள் தான். கல்வி, சுதந்திரம், விவசாயம், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டு மக்களது எதிர்காலமே கேள்விக்குறியான நிலைக்கு இந்த அரசியல்வாதிகள் தள்ளியுள்ளார்கள். இதனை நான் ஒரு அரசியல் பயங்கரவாதமாகப் பார்க்கின்றேன். காணி, ஒற்றுமை, சமத்துவம், மதம் எல்லாவற்றையும் இவர்கள் உருக்குலைத்துள்ளார்கள். இதனால் அரசியல்வாதிகளும் ஒரு பயங்கரவாதிகளே அவர்களிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றுவதற்காகவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்கியுள்ளேன் என்றார். நான் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்க போவதுமில்லை, நான் தனித்துவமாகவே களமிறங்கியுள்ளேன். நான் ஒரு இராணுவ வீரர். யாருக்கும் பயப்படத் தேவையில்லை. நான் யாரையும் அச்சுறுத்தி வாழத் தேவையுமில்லை என்றார்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Sat, 11/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை