தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் சஜித் வெற்றிபெறுவார்

பெரியபோரதீவு தினகரன், புதிய காத்தான்குடி, வெல்லாவெளி தினகரன் நிருபர்கள்

தமிழ் மக்கள் திரளாக வாக்களிப்பார்களாக இருந்தால். சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திங்கட்கிழமை (11) மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற சஜித்துக்கான தேர்தல் பரப்புரை கூட்டத்திலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. இந்த தேர்தலிலே 35 பேர் போட்டியிடுகிறார்கள். 33 பேர் ஏன் போட்டியிடுகின்றார்கள் என்று

 அவர்களுக்கே தெரியாது. இருவரிலே ஒருவர்தான் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த இருவரிலே ஒருவர் எப்படியாவது வெற்றி பெறுவார். தமிழ் மக்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அந்த இருவரில் ஒருவர் வெற்றிபெறத்தான் போகிறார்.

தமிழ் மக்கள் மற்றைய 33 பேரில் ஒருவருக்காவது வாக்களித்தாலும் அல்லது சோம்பேறித்தனமாக வீட்டிலே இருந்தாலும். இந்த இரண்டு பேரிலே ஒருவர் வெற்றிபெறத்தான் போகிறார். ஆனால், தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்ற கருத்துக் கணிப்பின்படி தமிழ் மக்களுடைய வாக்குகள் இல்லாவிட்டால், கோட்டாபய ராஜபக்ச இலகுவில் வெற்றிபெறுவார் என்பது எல்லாருடைய கணிப்பு. தமிழ் மக்கள் திரளாக வாக்களிப்பார்களாக இருந்தால். சஜித் பிரேமதாச வெல்லுவார் என்றும் அந்தக் கணிப்புகள் சொல்லுகின்றன.

மீண்டுமொருமுறையாக எங்களுடைய கையிலே இந்த நாட்டினுடைய தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. சிலர் கேட்கக்கூடும் தீர்மானித்த பிறகு எங்களுக்கு எதுவும் நடப்பதில்லை என்று. நியாயமானதொரு கருத்தைச் சொல்லலாம். ஆனால், அப்படிச் சொல்லிவிட்டு மற்றவர்களுடைய கையில் அந்தத் தீர்மானத்தை விடுவோமாக இருந்தால், எங்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தவறானவர் தெரிவு செய்யப்பட்டால், நாங்கள் எங்கே இருப்போம் எங்களுக்கு என்ன நடக்கப்போகின்றது. என்பதை நாங்கள் நீண்டதூரம் கற்பனை செய்துபார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில், அந்த தவறானவர் ஏற்கனவே ஆட்சி அதிகாரங்களை உபயோகித்து காண்பித்திருக்கிறவர். இலங்கைப் பிரஜா உரிமையை இரட்டைப் பிரஜா உரிமையைத் தான் பெற்றதாகக் கூறுகின்றார். அதற்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்று குற்றப்புலனாய்வுத்துறை நீதிமன்றத்திலே வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றது. ஒவ்வொருவரும் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்.

மக்களைத்திசை திருப்புவதற்காக பொய்யான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. ஒரேயொரு புள்ளடிமட்டும் போடுங்கள். வாக்குச் சீட்டை இரண்டாக மடித்து நடுவிலே பாருங்கள். நடுப்பகுதியிலே அன்னச்சின்னத்திற்கு எதிரே ஒரு புள்ளடியை போடுங்கள். இந்த இலகுவான அறிவுரையை அனைத்து மக்களுக்கும் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று தெரிவித்தார்.

 

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை