கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்து முதலைக்கு இரையாகி விடாதீர்கள்

மொட்டுக்கு வாக்களித்து முதலைக்கு இரையாகப்போகிறீர்களா? அல்லது அன்னத்திற்கு வாக்களித்து அழகாக வாழப்போகிறீர்களா? நீங்களே முடிவெடுங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் தெரிவித்தார்.

வினாயகபுரத்தில் நேற்று (12) சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கூறியதாவது,

வெள்ளை வான் சாரதி கூறிய கருத்துக்களைக்கேட்கும் போது இந்த உலகில் கம்போடியாவை விட மிகவும் கொடூரமான சித்திரவதையை இலங்கையில் செய்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.

இதுபோல் இன்னும் எத்தனைஆயிரம் மக்களை இவ்வாறு கொன்று குவித்துள்ளார்களோ தெரியாது. காணாமல் போனவர்களும் இதற்குள் உள்ளடங்குமா தெரியாது. அப்படிப்பட்டவர்களை மீண்டும் ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவது நல்லதா?

சஜித் ஜனாதிபதியானால் இந்த அழகான இலங்கைத்தீவு மனிதாபிமானமுள்ள ஊழலற்ற சர்வாதிகமற்ற குடும்ப ஆட்சியற்ற சமாதானம் நிலவும் புண்ணியபூமியாக மாறும்.

அவ்வாறு இல்லாவிட்டால் மீண்டும் அடிமைச் சமுகம் உருவாக வழிவகுக்கும். ஊழலும், அராஜகமும் தலைவிரித்தாடும். அதாவது மீண்டும் இருண்ட யுகமொன்று உருவாகும்.

1983களிலிருந்து தமிழ் மக்கள் பல யுத்தங்களைக் கண்டவர்கள். துன்பத்துக்குள்ளாகி பல வலிகளை உணர்ந்தவர்கள். கிறீஸ் மனிதன் யுகத்தை கண்டவர்கள்.

சஜித் மனிதாபிமானத்துடன் அபிவிருத்திகளைச் செய்யக்கூடியவர். தமிழர்கள் ஆயுதம் தூக்கியது உரிமைக்காக. பின்னர் உரிமை அரசியல் செய்தனர். இன்று உண்மையான தகுதியான தலைவரான சஜித்தை தெரிவுசெய்து தீர்வுக்கான பிள்ளையார் சுழியை இடுங்கள் என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை