உங்களுடைய பிரச்சினைகளை முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவிடம் கூறுங்கள்

உங்களுடைய பிரச்சினைகளை முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவிடம் கூறுங்கள் அதை நிறைவேற்றித்தர நான் உத்தரவாதம் அளிக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து அக்கரைப்பற்றில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,- முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அஷ்ரப் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தப் பிரதேசத்தில் துறைமுகத்தை அமைத்துக் கொடுத்தோம். தற்போது துறைமுகம் மணலால் நிரம்பியுள்ளதை நான் வரும் போது பார்த்தேன். இந்த அரசாங்கம் அந்த மணலை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நாங்கள் அதை நிரந்தர மீன்பிடித்துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம். கோட்டாபய ராஜபக்ஷ 16ஆம் திகதிக்குப் பின்னர் உங்களுக்கு இலவசமாக உரத்தை வழங்குவார்.

இந்தப் பிராந்தியத்தின் இளைஞர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுப்போம். முஸ்லிம் சமூகத்திற்காகவும், ஏனைய சமூகத்திற்காகவும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா சேவை செய்யக் கூடியவர். ஜாதி, மத பேதம் இன்றி நாட்டுக்கு வேலை செய்யக்கூடிய மற்றும் தலைமைத்துவம் வழங்கக் கூடியவர். புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றார். புலிகளை தோற்கடியுங்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டாம் என்றார்.

எங்களுடைய தலைவர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் பிரபாகரனிடம் சென்று மண்டியிட்ட போதும் அதாஉல்லா மட்டும்தான் மண்டியிடவில்லை. அதனால் சகோதரர்களே அவரோடு இணைந்து கொள்ளுங்கள். நாங்கள் இந்த முறை வெற்றிபெறுவோம். அந்த வெற்றியின் பங்காளராகுங்கள் என தெரிவித்தார்.

 

அக்கரைப்பற்று மத்திய நிருபர்

Fri, 11/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை