மட்டு. மாவட்டத்தில் அடை மழை; 25 குடும்பங்கள் இடம்பெயர்வு

24 மணிநேரத்தில் 102.4 மி.மீ

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையால் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் நாவற்குடா கிழக்குப் பகுதியில் வாழ்கின்ற 25குடும்பங்களை சேர்ந்த 87பேர் நாவற்குடா ஆரம்பப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட அனர்த்த நிவாரண நிலையத்தூடாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில பகுதிகளில் கடந்த 24மணித்தியாலங்களில் பதிவான விபரங்களை காலநிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க.சூரியகுமார் குறிப்பிடுகையில் தாளமுக்கத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையிலி நவகிரி பிரதேசத்தில் 96.01 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணி  74.0 மில்லிமீற்றர், மைலம்பாவெளி  65.03, பாசிக்குடா 23.0, உன்னிச்சை  111.0 , வாகனேரி  40.07, கட்டுமுறிவு  27.0, உறுகாமம்  103.05, கிரான்  70.00, மட்டக்களப்பு நகரப்பகுதியில் 102.04   மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் வெள்ளிக்கிழமை (29) காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவாகியுள்ளதாகவும் அடுத்து வருகின்ற 24 மணி நேரத்திற்குள் 100 மில்லிமீற்றர் தொடக்கம் 150 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பெரிய போரதீவு தினகரன் நிருபர்

Sat, 11/30/2019 - 09:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை