இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி பயணிக்கும்போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் பயணிக்கும் போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள எமது புதிய ஆட்சியில் அனைத்து தீர்வுகளையும் பெற்றுத் தருவோம். எங்களை நம்புங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் யாழ். நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஆவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு இந்த அரசாங்கம் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்தும் கூட வடக்கில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கவில்லை.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போது பல பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுத்தார்.

அதன் காரணமாகவே வடக்கில் இருந்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. வடகிழக்கு மாகாணத்தில் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக்கூடிய எந்த நடவடிக்கையையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை. இன்று இந்தப் பகுதியில் உள்ள மக்கள் கடன்காரர்களாக இருக்கின்றார்கள்.

நீங்கள் எங்களை நம்புங்கள். எங்களோடு ஒன்றிணைந்தால், உங்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்வுக்கு கொண்டு வருவோம்.

1983 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிறைய உள்ளன. காணிப்பிரச்சினை, சிறைக்கைதிகள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. 2009 முதல் 2015 வரை புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளை விடுவித்து, அவர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தோம்.

தேசிய பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் பயணிக்கும் போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதென்பது உங்களுக்குத் தெரியும். எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள எமது புதிய ஆட்சியில் மகிந்த ராஜபக்ச தலைமையில் அனைத்து தீர்வுகளையும் பெற்றுத் தருவோம் என உறுதியளித்தார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை