சிறுபான்மையின மக்கள் சஜித்துக்கு வாக்களிப்பதை விட வேறு வழியில்லை

சிறுபான்மையினர் இந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதை விட வேறு வழியில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த முதலாவது பிரசார பொதுக் கூட்டம் ஓட்டமாவடியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-,

இரவு பகலாக சேவை செய்கின்ற, இலஞ்ச ஊழல் இல்லாத ஒரு அரசியல்வாதியான சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டும்.

தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு சிறுபான்மை சமூகத்தினை அடகுவைத்து அநியாயக்கார கும்பலுக்கு ஆட்சியை கொடுப்பதற்கு எடுக்கின்ற முயற்சியை நாங்கள் முறியடிக்க வேண்டும். இதனை முறியடிக்க இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதை விட வேறு வழியில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு எடுக்க ஆரம்பித்து விட்டது. இவர்களது முடிவு தேர்தல் விஞ்ஞாபனம் வெளி வருவதோடு வெளியிடுவார்கள் .

இந்த சூழலில் நாட்டிலுள்ள சகல சிறுபான்மை சமூகமும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதிகள், அப்பாவி கிறிஸ்தவ சமூகத்திற்கு மேல் முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் ஒழிந்து கொண்டிருந்த கும்பலை பயன்படுத்தி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலால், சென்ற ஜனாதிபதி தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு காரணமாக இருந்த இரண்டு கூட்டங்களை அரசாங்கத்தின் மேல் கோப மூட்டுகின்ற ஒரு நிலைமைக்கு தள்ளி அதனூடாக தான் கதிரைகளில் அமர்ந்து கொள்ளலாம் என்பதற்கு வெளி சக்திகளின் அனுசரணையோடு நடாத்தப்பட்ட நாடகம்.

இன்னும் பல விடயங்கள் அம்பலத்திற்கு வரும். வெளிவர வேண்டும். ஆனால் இவையெல்லாம் மூடு மந்திரங்களாக இருக்கின்ற விடயங்கள்.

எப்படி நடந்தது என்று விசாரணை செய்த குழுவில் இருந்து பார்த்த போது பல விடயங்களை அவதானித்தேன்.

உளவுத்துறைகள் விடயங்களை மூடி மறைத்துள்ளது. எப்படியெல்லாம் உளவுத்துறைகளை பாவித்து சிறுபான்மை சமூகங்களை பகடைகளாக தங்களது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அரங்கேறிய நாடகங்கள் என்ன என்பதை பார்த்து இருக்கின்றோம்.

எங்களிடம் உள்ள உத்தரவாதம் ஒற்றுமையைத் தவிர வேறு இல்லை. ஒன்றுபட்டு இருப்பதன் மூலம் தான் இந்த சக்திகளை முறி யடிக்க முடியும். அதற்காக நாங்கள் தயாராக வேண்டும்.

அவ்வாறானால் இந்த வெற்றி எமது சமூகத்திற்கு வரவிருக்கின்ற பாரிய பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பதற்கான கேடயமாக இருக்கும் என்றார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்குடா தினகரன் நிருபர்

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை