அட்டாளைச்சேனை சம்புக்களப்பு வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

அட்டாளைச்சேனை, சம்புக்களப்பு பிரதான வீதி சீரான போக்குவரத்துக்குப் பொருத்தமற்றதாக காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் அதிகம் சிரமங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதான வீதியிலிருந்து பாவங்காய், மீலாத் நகர், சம்புநகர், ஆலம்குளம், கிராமங்களை ஊடறுத்து அக்கரைப்பற்று-அம்பாறை பிரதான வீதியை சென்றடையும் இவ்வீதி, பொது மக்களினதும், பிராந்திய விவசாயிகளினதும் பிரதான போக்குவரத்துப் பாதையாகவும் விளங்கி வருகின்றது.

பாடசாலை மாணவர்களின் நலன்கருதி இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவையும் இவ்வீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இவ்வீதியின் சம்புக்களப்புப் பகுதி மிக மோசமாகப் பழுதடைந்த நிலையில் குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கின்றது.

குறித்த வீதி ஆரம்பிக்கும் பாவங்காய் வீதி மற்றும் சம்புநகர் பிரதேசங்கள் காபர்ட் வீதியாக அபிவிருத்தி செய்யபட்டுள்ள போதிலும் சம்புக்களப்பு பிரதேசம் மாத்திரம் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காட்சியளிப்பதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை