வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக இலங்கையில் சர்வதேச நிதி மாநாடு

நிதி வழங்கும் நாடுகளை  அழைக்கப்போவதாக உறுதி

வடக்கு கிழக்குக்கு தனியான நிதியை வழங்கும் சர்வதேச நாடுகளை அழைத்து ‘சர்வதேச நிதி’ மாநாட்டை நடத்தி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்ததாவது,

நானும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவன். இந்த பிரதேசத்தில் வாழும் மக்களும் யுத்தத்தை நேரடியாக கண்டவர்கள். யுத்தத்தின் மூலம் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டன. அந்த வேதனைகளை நான் அறிவேன். வவுனியா மாவட்டம் 4 பிரதேச செயலகத்தையும், ஐந்து உள்ளூராட்சி மன்றங்களையும் கொண்டது.

 

102 கிராம அதிகாரி பிரிவில் 460 குக்கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த அனைத்து கிராமங்களும் எனது ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி செய்யப்படும்.குறிப்பாக இங்குள்ள இளைஞர், யுவதிகளின் தொழிற்பிரச்சினை தீர்க்கப்படும். இதற்காக பிரதேச செயலகங்கள் தோறும் கைத்தொழில் பேட்டைகள் நிறுவப்படும்.அதே போன்று பிரதேச செயலகங்களை மையப்படுத்தி டிஜிட்டல் தொழில் நுட்ப மேம்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளேன்.

நவீன தொழல் நுட்பங்களை கிராமங்களுக்கு கொண்டுவருவதன் மூலம் இங்குள்ள வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதனை சரவதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல முடியும்.இதன் மூலம் பிரதேச இளைஞர்கள் பெரிதும் நன்மையடைவர். யுத்தம் நிறைவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகின்றன. இன்னும் மக்கள் தமது அபிவிருத்தியை உரிய முறையில் பெற்றுக் கொள்ளமுடியவில்லை.யுத்தம் இடம் பெற்றதன் பின்னர் பல நாடுகள் குறிப்பாக ருவான்டா,புருண்டி போன்ற நாடுகள் கூட தமது நாட்டை அபிவிருத்தி செய்து கொள்ள சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுள்ளன.

இந்த அபிவிருத்திகளை மேற்பார்வை செய்ய ஜனாதிபதி செயலணி ஒன்றை ஏற்படுத்தவுள்ளேன். இதன் மூலம் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கும். சிலர் ஜனாதிபதி தேர்தல் வந்தால் வருவார்கள்.

எனது தந்தையான ரணசிங்க பிரேமதாச இந்த நாட்டில் மாணவ சமூகத்துக்கு பெரும் உதவிகளை செய்தவர். மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் மதிய உணவுகளை வழங்கினார். அதன் பிற்பாடு வந்தவர்கள் இதனை நிறுத்தினர். நான் ஜனாதிபதியானதும் மாணவர்களுக்கு 2 சோடிகள் பாடசாலை சீருடை, காலணி உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை வழங்கவுள்ளேன். இதேபோல் முன்பள்ளிகளை அரசாங்கத்தின் கண்கானிப்பின் கீழ் கொண்டுவந்து மாணவர்களின் கல்வி கட்டமைப்பை உருவாக்குவதுடன், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளை அரசாங்கத்தினால் வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளேன். கல்வித்துறை எவ்வாறு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கின்றதோ அதே போன்று சுகாதாரம், குடும்ப நல மருத்துவர்களின் சேவைகள் என்பன உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதுடன், தாய் சேய் பராமரிப்பு நிலையங்களும் உருவாக்கப்படும். சமுர்த்தி திட்டம் நடை முறைப்படுத்தப்படுவதுடன், ஜனசவிய திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளேன்.

மதக் கல்வியை கற்பதன் மூலம் சிறந்த ஒழுக்கமிக்க சமூகம் ஒன்றை உருவாக்க முடியும். இதற்காக போதனா பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 2025 இல் இந்த நாட்டில் வீடின்றி எவரும் இருக்கமாட்டார்கள் என்றார்.

வவுனியா விசேட, கோவில்குளம் குறூப் நிருபர்கள்

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை