யாழில் சிலர் அட்டகாசம்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்படுவதாக கூறப்படும் நிலையில், யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவரது வீட்டு மதில் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாகவும் அதனைத் தடுக்க முற்பட்ட போது அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இரவு மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளதுடன்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை அவரின் ஆதரவாளர்கள் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டு மதில்களில் ஒட்டிவந்தனர். அதன் தொடர்ச்சியாக எனது வீட்டுச் சுவரிலும் ஒட்ட முற்பட்ட போது, அதனை நான் எதிர்த்தேன்.
யாரிடம் கேட்டு என் வீட்டு மதிலில் ஒட்டுகின்றீர்கள் எனக் கேட்டதற்கு, யாரிடம் கேட்க வேண்டுமென அவர்கள் மிரட்டியதுடன் சுவரொட்டிகளை அதிகாரத்துடனும் மிரட்டல் பாணியிலும் ஒட்டுவதற்கு முயற்சித்தனர்.
இதற்கு அனுமதி வழங்காததால், அது பெரும் வாய்த்தர்க்கமாக மாறியதையடுத்து சுவரொட்டிகளை ஒட்டாமல் சென்று விட்டனர். காலையில் எனது வீட்டுச் சுவரிலும், கேற்றிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதை அவதானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்.விசேட நிருபர்
from tkn