இராஜ சோழனில் நடித்த இலங்கை கலைஞர்

இலங்கை தமிழ்த் திரைப்படத்துறைக்கும் நாடகத்துறைக்கும் பாரிய பங்களிப்புகளை செய்தவர் மறைந்த கலைஞர் ஸ்ரீசங்கர்.   ஸ்ரீசங்கர் வெளிநாட்டுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யும் ஒரு பிரபலமான நிறுவனமொன்றில் தேயிலை பரிசோதகராக பணியாற்றி வந்தார். அப்போதே  ஆயிரம் ரூபாய்  சம்பளத்தை பெற்றவர்.இவர் தனக்கு கிடைத்த சிறந்த தொழிலையையும் தன்னிடம் இருந்த நிதியையும் கலைத்துறைக்காக இழந்தவர். இவ்வாறு  தமிழ் நாடகத்துறைக்கு பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்த இவர்,  குத்துவிளக்கு, மஞ்சள் குங்குமம் உட்பட தமிழ்நாட்டில் தயாரான சிவாஜிகணேசனின் ‘ராஜராஜ சோழனில்’ ஒரு காட்சியிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்தவர் இவர். 

 இவரது நினைவு நாள் நிகழ்வை  தொடர்ந்து 39ஆண்டுகளாக இடைவிடாது தொடர்ந்து  நடத்தி வருபவர், இவர் நடித்த நாடகங்களில் இவருடன் இணைந்து நடித்த இவரது நண்பர் வீ. ஷண்முகராஜா. ஷண்முகராஜா இவருக்கு உருவச்சிலையும் நிறுவியிருக்கிறார்.  ஸ்ரீசங்கரின் நினைவு தின நிகழ்வை கொழும்பில் நடத்தவேண்டும் என்ற ஆவலுடன் எந்தவித குறைவும் இல்லாமல் நடத்திவரும் கலைஞரான ஷண்முகராஜா  நாளை  19ஆம் திகதி  சனிக்கிழமை மாலை 5.30மணியளவில் புறக்கோடடை பழைய நகர மண்டபத்தில்  ஸ்ரீங்கரின் 39வது நினைவு அஞ்சலி நிகழ்வை  நடத்தவிருக்கிறார். ஸ்ரீசங்கர் என்ற இந்த கலைஞரின் இயற்பெயர் வைத்தியலிங்கம். இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர். இவரது நாடகங்களான கொள்ளைக்காரன்’, ‘ஒரு மனிதன் இரு உலகம்’ போன்ற நாடகங்கள்  பருத்தித்துறையிலும் யாழ்ப்பாணத்திலும் பலமுறை மேடையேற்றப்பட்டவையாகும்.  இவர்,  இலங்கையில் எப்படியும் ஒரு தமிழ்ப்படத்தைத்  தயாரிக்கவேண்டும் என்று ஆவலுடன் துடித்துக்கொண்டு இருந்தார்.

கிங்ஸ்லி எஸ்.செல்லையாவும், ஸ்ரீசங்கரும் ஒன்று சேர்ந்து கொண்டார்கள். இவர்களுடன் ஏ. சுந்தரஐயா, பதூர்தீன், பரஞ்சோதி ஆகியோரும் ஒன்று சேர்ந்து சிறந்த முறையில் தமிழ் படமொன்றை உருவாக்கத் திட்டமிட்டார்கள். அதற்காக ‘கீதாலயம் மூவீஸ்’ என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.

அந்த காலத்தில் நாடகத் துறையிலும் தமிழ் சினிமாத் துறையிலும்  பணம்  படைத்தவர்களாக இருந்தவர்கள் இருவர்கள்.   இவர்களில் ஒருவர் ஸ்ரீசங்கர். மற்றவர் உதயகுமார்.  உதயகுமார் வெளிநாட்டில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பண்டங்களை இறக்குமதி செய்வதை தொழிலாகக் கொண்டவர்.  இந்த இருவரும் கலைத்தாகம் நிரம்பிய நல்ல கலைஞர்கள். மஞ்சள் குங்குமம் ஸ்ரீசங்கரின் கடும் முயற்சியால் 1968ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத் தயாரிப்புக்கு ஸ்ரீசங்கருக்கு ஆரம்பம் முதல் இறுதிவரை பெருந்துணையாக நின்றவர் கிங்ஸ்லி எஸ். செல்லையா என்ற புகைப்படக் கலைஞராவார். கிங்ஸ்லி எஸ். செல்லையா கொழும்பு கிங்ஸ்லி தியேட்டரில் ஒப்பரேட்டராக பணிபுரிந்தவர்.  

 அகில இலங்கை ரீதியாக நாடக மேடைகளில் பெரும் வெற்றி பெற்ற “மஞ்சள் குங்குமம்” நாடகத்தை திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டது.  

 மஞ்சள் குங்குமம்” திரைப்படத்தை இயக்கும் பொறுப்பு கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் நண்பரான நடிகர் எம். வி. பாலனிடம் ஒப்படைக்கப்பட்டது. நடிகர் எம். வி. பாலன் சிங்கள சினிமாவில் தனித்துவமான சிறந்த ஹாஸ்ய நடிகர். டாக்சி டிரைவர், நிர்மலா ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.  

 தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ‘இயக்குனர்’ பதவியின் பெறுமதியையும் தனது அதிர்ஷ்டத்தையும் உணராமல் அதனை ஹாஸ்யமாகவும் விளையாட்டாகவும் குரங்குக் கை பூமாலையாக அவர் எடுத்துக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது. அடிக்கடி கதையை மாற்றியமைத்தார். படத்தின் ஹாஸ்ய கதாபாத்திரத்தை தானே ஏற்று நடித்த இயக்குனர் எம். வீ. பாலன் படத்தின் உச்சக் கட்டத்தில் தனது கதாபாத்திரத்தை மாற்றியமைக்கவும் செய்தார். தானே படத்தில் ‘ஹீரோ’ ஆகியதாலும் படத்தின் தயாரிப்பு செலவு அதிகரித்தது.  

 நடிகர் ஸ்ரீசங்கர் படத்தை முடிக்க முடியாமல் திணறிய போது, கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் நண்பரான கடுகண்ணாவையில் வசித்த எம். பதுர்தீன், கொழும்பு அம்பாள் கபே உரிமையாளர் ஜீ. நாராயணசாமி, சுந்தரம் ஐயர் போன்றோர் கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் கடும் முயற்சியினால், இணைத் தயாரிப்பாளர்களானார்கள். நீண்ட நாள் தயாரிப்புக்குப் பின்னர் அளவுக்கதிகமான செலவுகளுடன் காதுக்கினிய எட்டு பாடல்களைக் கொண்ட நல்லதொரு திரைப்படமாக ஆனால் குற்றுயிராகத் திரைக்கு வந்தது இந்தத் திரைப்படம்.  

 இக்காலக் கட்டத்தில் ஸ்ரீசங்கர் இந்தியாவில் தயாரான “ராஜ ராஜ சோழன்” திரைப்படத்தில் சிவாஜி கணேசனோடு ஈழத்துப் புலவராக நடித்தார்.    ஸ்ரீசங்கர் நம்மை விட்டுப் பிரிந்து பல வருடங்களாகி விட்டன.  

 கலைஞர் ஸ்ரீசங்கரின் 38வது நினைவு தின நிகழ்வை  கடந்தாண்டு   தவறாது நடத்தியவர் ஸ்ரீசங்கர் நற்பணி மன்றத்தின் தலைவர் வீ.சண்முகராஜா. அன்றைய தினம் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.  ஊடகவியலாளர் கே. ஈஸ்வரலிங்கமும் இங்கு கலைஞர் ஸ்ரீசங்கரைப் பற்றி உரையாற்றினார்.  

Sun, 10/20/2019 - 13:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை