சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பரிசீலித்த பின்பே முடிவு எடுக்க வேண்டும்

ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ எதைத் தருவார் என்று முதலில் அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பரிசீலித்துப் பார்ப்போம். அதன்பின் அவரின் நிலைப்பாட்டைக் கேட்டறிவோம். பின்னர் நடவடிக்கையில் இறங்குவோம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

வாராந்த கேள்வி பதிலில் அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

கேள்வி:- உங்கள் கருத்துப்படி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்:- இம் முறை ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானது. ஜனாதிபதி யார் என்ற அடிப்படையில் தான் பாராளுமன்ற தேர்தல்களும் மாகாண சபைத் தேர்தல்களும் நடக்கும். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்றதொரு பொதுக் கருத்துண்டு.

அதற்குக் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுகாறும் ஐ.தே.கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தமையே. எப்படியும் தமக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் சஜித் இருந்தால் அவர் தன்னைத் தானே ஏமாற்றுபவர் ஆகிவிடுவார்.

கோட்டாபயவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சிங்கள வாக்குகளை அவரே பெறுவார். தமிழர்கள் எவருக்கும் வாக்களிக்காமல் விட்டால் கட்டாயம் கோட்டாபயவே வெல்வார். கோட்டாபயவுக்கு எந்தத் தன்மானத் தமிழனும் வாக்களிக்க மாட்டார் என்று நான் முன்னர் கூறியுள்ளேன்.

சஜித் எந்தவித நன்மையைப் பெற்றுத் தருவேன் என்று தமிழர்களுக்கு கூறாது விட்டு தமிழர்கள் எவருக்கும் வாக்களியாது விட்டால் அது கோட்டாபயவுக்கே நன்மையாகப் போய்விடும். கோட்டாபய தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக என்ன செய்யப் போகின்றார் என்று எதுவும் கூறத்தேவையில்லை. ஆனால் சஜித் எமக்கு என்ன தரப் போகின்றார் என்று கூறாவிட்டால் தமிழர்கள் அவருக்கு வாக்களிக்கா விட்டால் கட்டாயம் கோட்டாபய வெல்வார்.

கோட்டாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ள மாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவுக்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை. தற்போதிருக்கும் நிலையில் அவர் சீனாவைச் சார்ந்தே செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். இதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பமாட்டார்கள். அதனால் இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்கள் சார்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படும். அது எமக்கு நன்மைதரும்.

ஆகவே பாரம்பரிய தமிழ்ப் பேசும் பிரதேசங்கள் எவை என்பதை சஜித் ஏற்க வேண்டும். அப்படியானால் அவர்களுக்கு வழங்கப்போகும் தீர்வை அவர் வெளிப்படையாகக் கூறவேண்டும். ஆகவே சஜித் எதைத் தருவார் என்று முதலில் அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பரிசீலித்துப் பார்ப்போம். அதன்பின் அவரின் நிலைப்பாட்டைக் கேட்டறிவோம்.

பின்னர் நடவடிக்கையில் இறங்குவோம். இப்போது பொறுமை காப்போம்.

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை