அரசாங்கத்தை எந்தவொரு சக்தியிடமும் இனிமேல் தாரைவார்க்கப் போவதில்லை

வீடுகளுக்கு இப்போது வெள்ளை வான் வருவதில்லை

நாட்டின் ஜனாதிபதியாக நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சஜித் பிரேமதாஸ நாட்டு மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்படுவார். 25 வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் ஜனாதிபதி தெரிவு செய்ய வாய்ப்புக் கிட்டியுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 125 உறுப்பினர்களை வென்றெடுத்து உறுதியான அரசாங்கத்தை அமைக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விஷேட தேர்தல் மாநாடு நேற்று வியாழக்கிழமை சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது. கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் பாரியாரும் சஜித் பிரேமதாஸவின் தாயாருமான ஹேமா பிரேமதாஸவை கைத்தாங்கலாக மேடைக்கு அழைத்துச் சென்று கட்சியின் முதலாவது தீர்மானத்தை வாசித்து மாநாட்டின் அங்கீகாரத்தைப் பெற்று கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ என அறிவித்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திர இலங்கையின் மிகப்பலம் கொண்ட கட்சியாகும். நாட்டில் ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்திய ஒரே கட்சி இதுதான். சுதந்திர நாட்டை கட்டியெழுப்புவதற்காக அரும்பாடுபட்ட பல தலைவர்களைக் கண்ட கட்சி. ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தலைமையில் ரணசிங்க பிரேமதாஸவுடன் நான் இணைந்து செயற்பட்டவன். சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சிக்கு வலுவூட்டியவர்களுள் ஒருவராவார்.

எமது நாட்டில் இடைப்பட்ட காலத்தில் இன, மத, மொழி வேறுபாடுகள் தலை தூக்கியதால் நாம் பின்னடைவுகளை சந்தித்தோம். நாம் தொடர்ந்தும் பிளவுபட்டுக்கொண்டிருக்க முடியாது.

17 வருடங்களாக நாம் ஆட்சியிலிருந்தோம். ஆனால் அதைவிடக் கூடுதலான காலம் நாம் எதிர் கட்சியிலேயே இருந்து வந்துள்ளோம்.

2014ல் நாம் போட்ட வியூகத்தின் அடிப்படையிலேயே 2015 ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொண்டோம்.

ஆனால் எனக்கு அரசியலில் ஏற்படக்கூடிய சில அசௌகரியங்களை இதன்போது எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

ஆனால் அரசாங்கத்தை விட்டுக் கொடுக்காமல் நாம் உறுதியுடன் செயற்பட்டோம். இடையில் ஜனநாயக விரோதமாக அமைச்சரவையை கலைக்க முயற்சிக்கப்பட்டது. நாம் விட்டுக்கொடுக்காமல் 52 நாட்கள் போராடி வெற்றி கண்டோம். இந்த இடத்தில் ஒருவிடயத்தை உறுதியாகச் சொல்வேன்.

இனிமேல் நாம் அரசாங்கத்தை எந்தவொரு சக்திகளிடமும் தாரைவார்க்கப்போவதில்லை. எம்மை நோக்கி வீசப்படக்கூடிய ஒவ்வொரு பந்துக்கும் சிக்ஸர் அடித்து வெற்றிகொள்வோம்.

கடன் சுமையில் ஆட்சியைப் பொறுப்பேற்றபோது கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, அரச ஊழியர்க்கான சம்பள அதிகரிப்பு என பல்வேறு திட்டங்களுக்கும் நிதியொதுக்கினோம். கல்வித் துறை மேம்பாட்டுக்கு எமது ஆட்சியில் போன்று உதவிய அரசொன்று கிடையாது. எதிர்காலத்திலும் பட்ஜட்டில் கூடுதல் நிதியொதுக்கு நடவடிக்கை எடுப்போம்.

எரிபொருள் விலையை குறைத்து, சம்பளத்தை அதிகரித்த அரசாங்கம் எம்முடையது. இப்போது வீடுகளுக்கு வௌ்ளை வான் வருவதில்லை.

பதிலாக உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களை காப்பாற்றும் பொருட்டு அம்புலன்ஸ் வண்டிகளே வரும். எமது அரசாங்கத்தின் பணிகளை மக்கள் மீளாய்வு செய்து பார்க்க வேண்டும்.

வீதி அபிவிருத்தியை கண்டி- கொழும்பு- அம்பாந்தோட்டை என அதிவேக பாதைகளை அமைத்து வருகின்றோம். நான்கரை வருடங்களில் இத்தனையையும் எமது அரசு செய்துள்ளது. நாம் இன மத மொழி பேசும் கடந்து ஒன்றுபட்டால் இன்னும் சாதிக்கமுடியும்.

அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கை ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தல், இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தல் நாம் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் முடியாத காரியம் என்று எதுவும் கிடையாது என்றார்.

எம். ஏ. எம். நிலாம்

Fri, 10/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை