முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிக்கும் செலவுகளை நிறுத்த வேண்டும்

முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக அரசாங்கம் பெரும் தொகை நிதியை செலவிடுகிறது. தனது அரசாங்கத்தில் இவ்வாறான செலவீனத்தை நிறுத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,பொது மக்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் அவர்களது பாரியார்களினது பராமரிப்பு செலவுகளுக்காக பொது மக்களின் பணமே செலவிடப்படுகிறது. இதற்காக பாரிய தொகை வரவு செலவு

திட்டத்தில் ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பிரேமதாஸவின் மனைவி,முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க,மஹிந்த ராஜபக்‌ஷ போன்றோருக்காக பெருமளவு நிதி விரயமாக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வருமான வழிகள் இருக்கின்றன.அதற்கு ​மேலாக அவர்களை கவனிக்க அவர்களின் பிள்ளைகள் இரு க்கிறார்கள்.

இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிக்க பொது மக்களின் பணம் செலவிடப்படுவது அவசியமற்றது.

சிலவேளை அவர்களுக்கு வருமானம் பெறும் எந்த வழியும் இல்லாமல், அவர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டிருந்தால் மாத்திரம் அவர்களை கவனிக்க சமூக பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக குறிப்பிட்ட ஒரு தொகையை உதவுத்தொகையாக வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதனை தவிர வேறு அனைத்து உதவுத் தொகைகளும் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலிடத்தில் இருந்து தான் நாட்டை சீர்செய்வதற்கான முன்னெடுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.(பா)

 

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை