ஐந்து தமிழ் தேசிய கட்சிகளது தெரிவு எது?

தேர்தலை பகிஷ்கரிப்பதா? சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவா?

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்புக்கள் தேர்தலை பகிஷ்கரிப்பதா அல்லது சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவா? இந்த இரண்டு தெரிவுகளில் ஐந்து தமிழ்க் கட்சிகளும் எதனைச் செய்யப் போகின்றனர் எனக் கேள்வி எழுப்பியிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தமிழ்க் கட்சிகளின் ஏமாற்று நாடகத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கொடுத்த கோரிக்கைகளை எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்திற்காகப் பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கொடுக்கப்பட்டவை.

தென்னிலங்கை அரசியற் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் சமஸ்டி கிடையாது ஒற்றையாட்சி அரசியலின் கீழ்தான் தீர்வு என்று திரும்பத் திரும்ப கூறியும் இவர்கள் அதனை ஏன் உள்ளடக்கி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று தான் வேட்பாளர்களும் அவர்களைச் சார்ந்த கட்சி பிரமுகர்களும் கூறுகின்றார்கள். அதன்பின் ஐந்து கட்சிக் கூட்டமைப்புக்கு இரண்டே இரண்டு தெரிவுதான் உண்டு. தேர்தலை பகிஷ்கரிக்கச் சொல்ல வேண்டும். இல்லையெனில் தம்பி சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும்.

இரண்டில் ஒன்றை இவர்கள் சொல்வார்களா?. தற்போது வைத்திருக்கும் கோரிக்கைகளில் சர்ச்சைக்குரிய விடயங்களை விட்டுவிட்டுப் பார்த்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி காலத்திற்குக் காலம் ஜனாதிபதி, பிரதமர்கள் ஆகியோரிடம் முன்வைத்த கோரிக்கைகள் தான்.

2005ஆம் ஆண்டு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை முன்வைத்து, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு சமஸ்டிக்கு ஆதரவாக சிங்கள மக்களும் 49வீதம் வாக்களித்தனர். ஆனால் அந்த நிலை இன்றில்லை. அன்று தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று பகிஷ்கரிக்கச் சொன்ன த.தே.கூட்டமைப்பு - இப்போது எந்த முகத்துடன் சமஷ்டி பற்றி பேச முடியும். இது அவர்கள் விட்ட மிகப் பெரிய வரலாற்றுத் தவறு என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Tue, 10/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை