அனைத்து மக்களையும் ஒரே கண் கொண்டே பார்ப்பேன்

முஸ்லிம் பிரமுகர்கள் மத்தியில் சஜித்

சிறுபான்மை-, பெரும்பான்மை என்ற பேதமோ இன,மத, ரீதியில் எவரையும் நோக்கப் போவதில்லையெனவும் அனைத்து மக்களையும் ஒரே கண் கொண்டே பார்ப்பதாக ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய முஸ்லிம் போரம் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இரவு கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்ற முஸ்லிம் புத்திஜீவிகள், உலமாக்கள், முஸ்லிம் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடிய சஜித் பிரேதாஸ,

தான் கொழும்பில் முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் புதுக்கடையில் பிறந்து வளர்ந்தவன், அந்த மக்களுடன் ஒன்றாக வாழ்ந்தவன் எனக் குறிப்பிட்டார். தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் நெருக்கமாக வாழ்ந்த பகுதியில் வளர்ந்ததால் அவர்களோடு இணக்கமாக செயற்பட முடிந்தது எனவும் தெரிவித்தார்.

இன, மத, மொழி பேதம் தன்னிடம் கிடையாது எல்லோரையும் சமமாகவே பார்க்கின்றேன். இனம், மதம் எம்மை ஒன்றுபடுத்த பயன்பட வேண்டுமெயொழிய பிளவுபடுவதற்குரியதல்ல. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உரிய வழி வகைகள் காணப்படும். எந்தவொரு சமூகத்துக்கும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது. தீவிரவாதம், வன்முறைகளுக்கு இடமளிக்க போவதில்லை. மதவழிபாடுகளுக்கு உத்தரவாதமளிக்கப்படும். புதிய பொருளாதாரக் கொள்கையொன்று அமுல்படுத்தப்படும். அதனை எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புகுத்தப்படும்.

எந்த ஒரு சமூகமும் பாதிக்கப்படும் வகையில் செயற்பட மாட்டேன். நான் உண்மையான பௌத்தன் அதன்படி என்னிடம் இனவாதமோ மதவாதமோ கிடையாது. எல்லாச் சமூகங்களையும் எனது நாட்டு மக்களாகவே நேசிப்பேன் எனவும் குறிப்பிட்டார். பிரமுகர்கள் எழுப்பிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்து தெளிவுகளை வழங்கினார். அமைச்சர்கள் எம்.எச்.ஏ.ஹலீம், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாஷிம் மற்றும் ஏ.எச்.எம். பௌசி, அலி சாஹிர் மௌலான, அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐ.தே.க.வின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரும் பங்கேற்றனர்.

எம்.ஏ.எம். நிலாம்

 

Sat, 10/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை