எந்த இனத்தையும் தனிமைப்படுத்த அனுமதியளிக்க மாட்டோம்

எந்தவொரு இனத்தையும், மதத்தையும் தனிமைப்படுத்த அனுமதியளிக்க மாட்டோம். சகல இனங்களும், மதங்களும் சகோதரத்துவத்துடன் வாழும் சூழலை நாட்டில் உருவாக்குவோமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

காணாமல்போனோர் தொடர்பிலான பிரச்சினைக்கு எமது அரசாங்கம் அமையப்பெற்று குறுகிய காலத்துக்குள் அதற்கான உரிய காரணங்களுடன் தீர்வை வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் ‘தேசிய ஐக்கியம்’ எனும் கொள்கை வெளியிடும் பொதுக் கூட்டம் நேற்று நீர்கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

காணாமல்போனோரின் உறவுகள் பல வருடங்களாக துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இடங்களை மீட்டுதருமாறு போராட்டம் நடத்துகின்றனர். இராணுவத்தினரிடம் பல தசாப்தங்களாக இந்த மக்களின் காணிகள் உள்ளன.

எமது அரசாங்கம் அமையப்பெற்றதும் காணாமல்போனோர் தொடர்பில் உரிய காரணிகளுடன் குறுகிய காலத்தில் தீர்வை வழங்குவோம். என்ன நடந்ததென உண்மை நிலவரத்தை கண்டறிந்து அந்த மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.

யுத்தம் காரணமாக பொருளாதாரம், கல்வி உட்பட அனைத்துத் துறைகளில் வடக்கு மக்களின் வாழ்க்கைதரம் வீழ்ச்சிகண்டுள்ளது.

எந்தவொரு இனத்தையும் மதத்தையும் தனிமைப்படுத்த விடமாட்டோம். இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வை வழங்க நிரந்த நிறுவனமொன்றையும் அமைப்போம்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை