* தாழ்ந்த பகுதிகளில் வெள்ளம்
* நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றுக் காலை முதல் தொடர்ச்சியாக பெய்து வந்த அடைமழையால் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
இதனால், அலுவலக பயணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது.
கொழும்பில் கொலன்னாவை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் பல வீதிகளில் வௌ்ளம் நிறைந்து குடிமனைகளில் புகுந்ததால், நூற்றுக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடையும் நிலை உருவானது.
அனர்த்த நிலைகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் அனர்த்த மீட்பு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் முப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். உதவி தேவைப்படுவோர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை 117 என்ற இலக்கத்தில் மூன்று மொழிகளிலும் தொடர்புகொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.
கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் புத்தளம் மாவட்டத்திலேயே ஆகக்கூடியதான 107.4 மில்லி மீற்றர் மழை பெய்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இக்காலநிலை தொடர்ந்தும் சில தினங்களுக்கு நீடிக்குமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி இன்றும் நாட்டின் மேல், வடமேல், வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு.
மத்திய. சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் சுமார் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் காலை வேளைகளில் கடும் பனிமூட்டம் காணப்படும் என்பதால், சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பதுடன் மின்னல் தாக்கம் அதிகமாக இருக்குமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்மட்டம் அதிகரித்ததனால், நேற்றும் இராஜங்கனை, தபோவ மற்றும் தெதுருஓய நீர்த்தேக்கங்களின் இரண்டு வான்கதவுகள் வீதம் திறக்கப்பட்டன.
கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி வாழ் மக்கள் அதற்கான அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
லக்ஷ்மி பரசுராமன்
from tkn