முஸ்லிம் எம்பிக்கள் அனைவரும் சமூகத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம்

அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவிப்பு

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமூகத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம் என கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

கிண்ணியாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாடு நேற்று முன்தினம் (24) நடைபெற்ற போதே அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

முஸ்லிம் சமூகத்தினை நசுக்குவதற்காக முயற்சி செய்கின்றார்கள், எமது சமூகம் கஷ்டப்படும் போது எவரும் கவனிக்காது இருந்தார்கள். இந் நிலையில் தேர்தல் ஒன்று வந்தபோது ஏஜண்டுகளாக கண்டியிலே, மட்டக்களப்பிலே, திருகோணமலையிலே, வடக்கிலே அழைத்து திரிகின்றார்கள்.முஸ்லிம் சமூகத்தினை பயமுறுத்துகின்றார்கள். எங்களுக்கு வாக்களியுங்கள். வாக்களிக்க முடியாவிட்டால் சும்மா இருங்கள். என்றெல்லாம் பயமுறுத்தி அச்சமூட்டுகின்றனர். தெற்கிலே சிறுபான்மையான முஸ்லிம் மக்களின் வீடுகளுக்கு சென்று பயமுறுத்துவதாகவும், கட்டளையிடுவதாகவும் தெரிவிக்கின்றனர். முஸ்லிம் மக்கள் மத்தியிலே நாங்கள் தான் உங்களை பாதுகாப்போம். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கெஞ்சுகின்றனர்.

அண்மையில் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்களை இழிவாக பேசிய சம்பவமும் நடைபெற்றுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமூகத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம். அன்று இந்த சமூகத்திற்கே எமது பதவிகளை தூக்கி எறிந்தவர்கள் நாம்!இன்று சஜித் பிரேமதாச கொலைகாரர் அல்ல ஜனநாயகவாதி நாம் அவரிடம் எமது கட்சி பேசியுள்ளது. வடக்கு, கிழக்கில் காணிப்பிரச்சினைகளை குழு அமைத்து ஒரு வருடத்தில் நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த அரசியல் எங்களுக்கு புதிதல்ல எமது சமூகத்திற்காக நாம் எமது உயிரையும் துச்சமென மதிக்காது களத்தில் இறங்கியவர்கள். எமது சமூகம் பயங்கரவாதிகளுக்கு ஒரு போதும் துணைபோக மாட்டார்கள். எமது சமூகத்திற்கிக பாராளுமன்றத்தில் அச்சமின்றி எப்போதும் குரல்கொடுத்துக்கொண்டே இருப்போம். புத்தளத்தில் குப்பைகளை கொட்டியதை முதலில் எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்களும் அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரசே.

இந்த நாட்டில் வில்பத்தை அழித்தவன் நான் தான் என்று எனக்கு எதிராக பல வழக்குகளை தாக்கல் செய்தார்கள், அதேபோன்று சஹ்ரானை வளர்த்தவன் நான் தான் என்றார்கள் பேரினவாதிகள். நாங்கள் அச்சம் கொள்ளவில்லை. எல்லாத்திற்கும் முகம்கொடுத்தோம். ஆனால் எந்த குற்றமுமில்லை என்று அறிவித்தார்கள்.வைத்தியர் சாபியை அநியாயமாக கைது செய்து கஷ்டப்படுத்தினார்கள். அப்பட்டமான பொய்களை சுமத்தி அசிங்கப்படுத்தினார்கள்.

இந்நாட்டில் ரத்னதேரர், விமல் வீரவங்க போன்றோர் இந்நாட்டின் பேரினவாதிகளின் தலைவர்கள் இவர்கள் தான் அனைத்தையும் மேற்கொண்டவர்கள். முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை அந்த பிரச்சினைகள் காரணமாக தரைமட்டமாக்கினார்கள்.

நாட்டின் சட்டத்தினை கையிலெடுத்தார்கள். முஸ்லிம் சமூகத்தினை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். நசுக்குவதற்காக சிறுபான்மை கட்சிகளை துரத்துவதற்காக எத்தனித்துக்கொண்டிருக்கின்றார்கள். சட்டம் சரியாக இருந்ததால் அப்போது மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோம், சட்டம் சிறப்பாக செயற்பட்டதால் இந்நாட்டில் நாம் தலை நிமிர்ந்து நடந்து கொண்டிருக்கின்றோம் என்றார்.

கந்தளாய் தினகரன் நிருபர்

Sat, 10/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை