சஜித்திற்கு வாக்களிக்குமாறு கூட்டமைப்பினர் கடைசி நேரத்தில் கோருவர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடைசி நேரத்தில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கச் சொல்லிக் கொண்டு வருவார்கள். கடந்த 5 வருடமாக நல்லாட்சி ஊடாக எதனைப் பெற்றுத் தந்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டு விரட்டியடியுங்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் எமது மக்களுக்கு கிடைத்த அபிவிருத்திகள் கடந்த 4 வருட காலமாக இல்லாமல் போயிருக்கிறது. தமிழ் மக்களுக்கு

தேவையான அரசியலமைப்பை பெற்றுக் கொடுக்கின்றோம், சமஷ்டியை பெற்றுக் கொடுக்கின்றோம், அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொடுக்கின்றோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். நல்லாட்சியை ஏற்படுத்துகின்றோம் என்று ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை ஏற்படுத்தினார்கள்.

ஆனால் அந்த ஆட்சியில் எமது மக்களுக்கான உரிமைகளும் கிடைக்கவில்லை. அபிவிருத்தியும் கிடைக்கவில்லை. வன்னி மாவட்டத்தில் இருக்கும் தமிழ் மக்கள் பாரிய அளவில் மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மக்களுக்கு உரிமைகள் எவ்வளவு அவசியமோ அதைவிட வேகமாக அபிவிருத்திகள் தேவைப்படுகிறது. அந்த அபிவிருத்திகளை வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் பெறக் கூடியதாக இருக்கும். இல்லையென்றால் கடந்த நான்கு வருடங்களைப் போல் மீண்டும் 5 வருடங்களை கடக்க வேண்டி வரும். இந்த அடிப்படையை தமிழ் மக்கள் சரியாக புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

75 வீதமான சிங்கள மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அந்த வெற்றியில் தமிழ் மக்களும் பங்காளர்களாக வேண்டும்.அப்போதே எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

வவுனியா விசேட நிருபர்

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை