தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி விமர்சிக்க சிங்கள தலைமைகளுக்கு அருகதை இல்லை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றியோ அதன் தலைவர் சம்பந்தன் ஐயாவை பற்றியோ தென்பகுதியில் உள்ள சிங்கள அரசியல்வாதிகள் யாரும் விமர்சிப்பதற்கு அருகதை இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

களுதாவளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஷபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தீபாவளிக்கு தீர்வு தருவோம் என்று மட்டும்தான் சொல்லுவார்கள். ஐந்தாவது தீபாவளியும் வந்துவிட்டது. சம்பந்தன் அடுத்ததாக என்ன சொல்லலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கின்றார். சுமந்திரன் மீது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சத்துடனேயே செயற்படுகின்றனர் என பேசியது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் கூறிய அரியநேத்திரன் மேலும் கூறுகையில்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக கேள்வி கேட்பதற்கும், விமர்சிப்பதற்கும் வாக்களித்த வடக்கு, கிழக்கு தமிழ்மக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. தென்பகுதியில் உள்ள சிங்கள அரசியல் வாதிகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. கடந்த 71 வருடங்களாக எமது மக்களை ஏமாற்றி எம்மை இனப்படுகொலை செய்த வாரிசுகள் இன்று எமது மண்ணில் வந்து எமது தமிழ் தலைமைகளை பற்றி பிழையாக விமர்சிப்பது ஏற்கமுடியாது.

சம்பந்தன் ஐயா தீபாவளிக்கு பொங்கலுக்கு இடையில் தீர்வு வரும் என்று கூறியது உண்மைதான். சிங்கள தலைமைகளை நம்பித்தான் அவர் கூறினார். ஒரு இனத்தை வழிநடத்தும் அரசியல் கட்சியின் தலைமை தமது மக்களை நம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக கால எல்லைகளை குறித்து நம்பிக்கை ஈட்டுவதற்காக இவ்வாறு கூறுவது ஒன்றும் புதிதல்ல.

ஏன் நாமல் ராஜபக்ஷவின் தந்தையார் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்தபோது தமிழ் மக்களுக்கு பதின்மூன்றுக்கு மேல் (13+) அரசியல் அதிகாரம் தருவதாக கூறினார் அல்லவா அதை தந்தாரா? தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றி முள்ளிவாய்காலில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததல்லவா வரலாறு?

எத்தனை பெண்களின் பூவையும் பொட்டையும் இல்லாமல் செய்த தென்பகுதி இனப்படுகொலை வாரிசுகளுக்கு வெட்கம் இல்லாமல் நமது பெண்கள் பன்னீர் தெளித்து பொட்டுவைத்து, ஆரார்த்தி எடுக்கும் மிக கீழ்தரமான செயல்கள் இப்போது எமது மண்ணில் அரங்கேறிக்கொண்டிருப்பது வெட்க கேடான செயலாகும்.

தேர்தலில் ஜனநாயக ரீதியாக யாருக்கும் வாக்களிக்க எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. அதுபோலவே எந்த கட்சி உறுப்பினர்களும் பிரசாரம் எந்த இடத்திலும் சென்று மேற்கொள்ள உரிமை உண்டு அதற்காக கீழ்த்தரமான விமர்சனங்களை தமிழ்த் தேசியகூட்டமைப்பு மீது அவதூறான அநாகரீக வார்த்தைகளை கூறுவதற்கு எந்த கட்சி சிங்கள தலைமைகளுக்கும் அருகதை இல்லை.

நாமல் ராஜபக் ஷவின் பாட்டன் பூட்டன் காலத்தில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்திருப்பின் விடுதலைபுலிகள் உருவாகி இருக்கமாட்டார்கள். அந்த போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009, மே 18 க்குப்பின் தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சம்மந்தன் ஐயா தலைமையில் எமக்கான அரசியல் தீர்வை பெறும் முயற்சியில் அரசியல் செயல்பாடுகளை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்தபோது 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசம்பர் வரையும் ஏறக்குறைய 18, தடவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இனப்பிரச்சினை தொடர்பாக பேசியபோது அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை யார் ஏமாற்றியது. உங்கள் தந்தை அல்லவா?

வடக்கு, கிழக்கு தமிழ்மக்களை கொன்று குவித்து விட்டு அவர்களை புதைத்த மண்மேடுகள் மீது ஏறி நின்று தமிழ் தலைவர்களுக்கு விரல் நீட்ட எந்த சிங்கள தலைவர்களுக்கும் உரிமையோ, அருகதையோ இல்லை என்றார்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்-

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை