வெலிமடை பிரதேச சபைக்கு அருகில் பிரதேச சபைக்குச் சொந்தமான, காணியிலுள்ள தற்காலிக தொழிலாளியின் வீட்டின் மீது மரம் வீழ்ந்ததில் பெண் ஒருவர் மற்றும் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (12) இரவு 9.30 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாக வெலிமடை பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் மற்றுமொருவர் பலத்த காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெலிசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு, இவ்வாறு வீட்டின் மீது டர்பன்டைன் மரமொன்று வீழ்ந்துள்ளதோடு, இதில் 18 வயதான வீ. சுரஞ்சனி மற்றும் இரு சிறுவர்களான எம். ராமகிருஷ்ணன் (14), சுபுன் குமார (10) ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, இதில் எம். மஹேந்திரன் (22) என்பவர் காயங்களுக்குள்ளாகி பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்த குறித்த பெண்ணின் கணவரான எம். மகேஸ்வரன் (23), "விபத்தில் எனது மனைவியே உயிரிழந்துள்ளார். எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. மற்றைய இரண்டு சிறுவர்களும் இரவில் தங்குவதற்காக வீட்டிற்கு வந்த உறவினர்களின் பிள்ளைகள். நேற்று இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. வெலிமடை பகுதியில் பகலில் பலத்த மழை பெய்து வருகின்றது. நேற்றும் (12) இவ்வாறு மழை பெய்தது. நாங்கள் இரவு உணவு சாப்பிட்டு தூங்கினோம். திடீரென்று, வீட்டிற்கு மேலே ஒரு பெரிய மரம் வீழ்ந்தது. அதில் சிக்கிய நான் உட்பட வீட்டிலிருந்த 06 பேரையும் அயலவர்கள் வெளியே எடுத்து வெலிமடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் எனது மனைவி உள்ளிட்ட 3 பேர் மரணமடைந்துள்ளனர்." என்றார்.
"இந்த பிரசேசபைக்குட்பட்ட காணியில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளியிலிரந்து வந்த சுமார் 30 குடும்பங்கள் வாழ்கின்றனர். 88-89 பயங்கரவாத காலத்தில், இந்த பகுதியின் வளாகத்தில் அமைந்திருந்த இந்த பிரசே சபையின் கட்டிடம் தீயிட்டு அழிக்கப்பட்டது. அதன்பிறகு, சிறிது காலம் இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டது. இவ்வாறு குப்பை கொட்டப்பட்ட இடத்தில் தொழிலாளர்கள் தற்காலிக வீடுகளைக் கட்டியுள்ளனர். இந்த பகுதி நிலச்சரிவு அபாயத்திற்குட்பட்ட பகுதியாக காணப்படுகின்றது. எனவே, இங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் மீள்குடியேற்றுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தெரிவித்த வெலிமடை பிரதேச சபைத் தலைவர் ஆர். பந்துசேன, "எங்கள் சபைக்குச் சொந்தமான ஊரில் உள்ள பழைய கட்டட காணியில் வசிப்பவர்களின் பாதுகாப்பிற்காக சபைக்கு சொந்தமான நிலத்தை மீளக்குடியமர்த்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில், அவர்களை மீள்குடியேற்ற குறித்த பிரதேசவாசிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த தொழிலாளர் வீடுகளை கட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்பிரதேச சபையில் தொழிலாளர்கள் தவிர்ந்த வெளி நபர்களும் அனுமதியின்றி குடியேறியுள்ளனர். இது சபைக்கு குழப்பமான நிலையை தோற்றுவித்துள்ளது" என்றார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
from tkn