8ஆவது நாளாக தொடரும் ரயில்வே போராட்டம்

82 மில் ரூபாவுக்கு மேல் நஷ்டம்

பணிக்கு திரும்பும் வரை பேச்சுவார்த்தை இல்லை

போக்குவரத்து அமைச்சு திட்டவட்டம்

கடமைக்கு திரும்பாத சகல ரயில் ஊழியர்களும் கடமையை விட்டும் விலகியவர்களாக அறிவிக்கப்படுவர் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ள நிலையிலும் 8ஆவது நாளாகவும் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் நேற்று சுமார் 15ரயில்கள் வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை ரயில்வே வேலை நிறுத்தத்தினால் சுமார் 82பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறினார். ஓய்வுபெற்ற ரயில் சாரதிகள் மற்றும் ரயில் பொறுப்பதிகாரிகளை பயன்படுத்தி அலுவலக ரயில்கள் சிலவற்றை இயக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சின் அச்சுறுத்தல்களுக்கு ரயில் ஊழியர்கள் அடிபணியப் போவதில்லை எனவும் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் ரயில்வே தொழிற் சங்கங்கள் அறிவித்தன. இதேவேளை வேலை நிறுத்தத்தை கைவிட்டு வரும் வரை இனி எந்த ஒரு ரயில் தொழிற்சங்கத்துடனும் பேச்சு நடத்தப் ​போவதில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.

பணிக்கு திரும்ப சில ஊழியர்கள் தயாராக இருந்தாலும் அதற்கு இடையூறு செய்யப்படுவதாக கூறிய அவர் 15 முதல் 20 வரையான ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்காக வர்த்தமானி அறிவித்தல் நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.(பா)

Fri, 10/04/2019 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை