பேஸ்புக் களியாட்டம்; போதைப் பொருள் பாவித்த 25 இளைஞர்கள் கைது

அவிசாவளையிலுள்ள தனியார் ஹோட்டலொன்றில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அதில் கலந்து கொண்ட 25 பேரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த போதைப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (12) இரவு அவிசாவளை தெம்பிலியான பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 21 இளைஞர்களும் 04 யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எம்பிலிபிட்டிய, தெஹியோவிட்ட, கொஸ்கொட, கொழும்பு,காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இக்களியாட்ட நிகழ்வு பேஸ்புக்கிற் கூடாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சட்டவிரோத களியாட்ட நிகழ்வில் கலந்து கொள்ளும் இளைஞர்களும் யுவதிகளும் போதைவஸ்து பயன்படுத்துவது தொடர்பில் அவிசாவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே பொலிஸார் குறித்த ஹோட்டலை சுற்றி வளைத்து அதில் கலந்து கொண்டவர்களை கைதுசெய்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளிடமிருந்து 1315 மில்லிகிராம் ஹெரோயின், 525 மில்லிகிராம் 'ஐஸ்' வகை போதைப் பொருள் மற்றும் 10 கிராம் 210 மில்லிகிராம் கஞ்சா என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேக நபர்களை அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

லக்ஷ்மி பரசுராமன்

Mon, 10/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை