சு.கவின் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்திற்கும் நாம் தயாராக இல்லை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கும் நோக்கத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் கட்சியின் உறுப்பினர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு தயாரில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட மாநாட்டில்இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி:

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பின்னடைவை சந்தித்திருந்தாலும் அக் கட்சியின் மக்கள் நேய செயற்பாடுகளினால் கட்சி அழிவை சந்திக்கவில்லை எனவும்  தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பலவீனமடைந்திருப்பதாக எவர் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக ஆட்சி பீடத்தில் அமர நினைக்கும் எந்த வேட்பாளராக இருந்தாலும் அவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியமாகும் எனவும் எதிர்கால ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது காணப்படும் அரசியலமைப்பின்படி எதிர்காலத்தில் அதிகாரமற்ற ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பதைவிட அதிகாரமுள்ள அரசாங்கத்தை உருவாக்குவதனூடாக 2020ல் பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றுவதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இலக்கு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தனித்து போட்டியிடாமல் கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக அந்த இலக்கினை அடைந்துகொள்வதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, ஊழல் புரவோரை அழிவடையச் செய்துள்ள நாட்டினை புதிய பாதையில் கொண்டு செல்ல இலஞ்சம், ஊழல் அற்ற ஜனநாயகமும் சுதந்திரமும் மேலோங்கிய சமூகத்தை அந்நிய நாட்டு சக்திகளுக்கு தலை வணங்காத நாட்டை கட்டியெழுப்புவது புதிய அரசாங்கத்தின் நோக்கமெனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தில் காணப்படும் மோதல் பிரதமருக்கும் தனக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினை இல்லை எனவும் அது ஊழலுக்கும் இலஞ்சத்திற்கும் எதிரான மோதல் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மோசடியான புதிய அரசியல் கொள்கைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பண்டாரநாயக்க மக்கள் நேய அரசியல் கொள்கைக்குமிடையிலான மோதல் என அதைக் குறிப்பிடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரை அப்பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு தான் நடவடிக்கை எடுத்ததாகவும், அவர்கள் பொறுப்பேற்ற விடயங்களை சரிவர ஆற்ற முடியாதது தனது பிரச்சினை இல்லையெனத் தெரிவித்த ஜனாதிபதி இன்று மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவதும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சபாநாயகருக்கு வழங்கியுள்ள கடிதத்தின் அடிப்படையிலேயே எனவும் தெரிவித்தார். (ஸ)

Mon, 09/30/2019 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை