ஸ்மித் மீண்டும் அணித்தலைவராக தகுதியானவர்-

மார்க் டெய்லர்

ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக தகுதியானவர் என அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.

ஸ்டீஸ் ஸ்மித்தின் மீள்வருகை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக மீண்டும் வருவார் என்று நம்புகிறேன். பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் அவருக்கும், டேவிட் வோர்னர், பான்கிராப்ட் ஆகியோருக்கும் தண்டனை வழங்கப்பட்டபோது நானும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் தான் இருந்தேன்.

தடைக் காலத்தில் அவர் கடுமையான பாடம் கற்றுக்கொண்டு இருப்பார். அதனால் அடுத்த முறை அவர் சிறந்த அணித்தலைவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. தற்போது டெஸ்ட் அணியின் தலைவராக டிம் பெய்ன் இருக்கிறார். அவரது பதவிக்காலம் முடிந்த பிறகே இது பற்றி சிந்திக்க விரும்புகிறேன்.

அது அடுத்த 6 மாதத்திலேயோ 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்தோ கூட இருக்கலாம். ஆனால் ஸ்மித் மீண்டும் அணியை வழிநடத்த தகுதியானவராக இருப்பார்’ என கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட்டின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய அப்போதைய தலைவர் ஸ்டீவ் ஸ்மித், ஓராண்டு தடையை அனுபவித்தார்.

தடைக்காலம் முடிந்து கடந்த மார்ச் மாதம் அணிக்கு திரும்பினார். மேலும் ஓராண்டு காலம் அவருக்கு எந்த போட்டிகளிலும் அணித்தலைவர் பதவி வழங்கப்படாது என்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்து இருந்தது.

இதன்படி பார்த்தால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தான் அவரால் மீண்டும் அணித்தலைவராக ஆக முடியும்.

தடை அனுபவிக்கும் போது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்மித், தடைக்கு பின்னர் முதலிடத்தை தவறவிட்டாலும், முதல் 10 இடங்களில் ஆதிக்கம் செலுத்தினார்.

அண்மையில் ஆரம்பமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், தனது மீள்வருகை நிரூபித்த ஸ்மித், மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி சாதித்தார். அத்தோடு, டெஸ்ட் அரங்கில் பல்வேறு சாதனைகளையும் பதிவு செய்தார்.

தற்போதைய ஆஷஸ் தொடரில் 30 வயதான ஸ்மித், இரட்டைச்சதம் உட்பட 671 ஓட்டங்களை குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 09/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை