நீதிமன்ற தீர்ப்பினை மீறியவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்

சம்பந்தன் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்

முல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பினை மீறியவர்களுக்கும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறிய பொலிஸாருக்கும் எதிராக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.  

இதுதொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற்று நீதிமன்ற தீர்ப்பினை மீறியவர்களுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இரா. சம்பந்தன் கடிதமொன்றின் மூலம் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.நீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பில் முறையானதும் சுயாதீனமானதுமான விசாரணைகள் இடம் பெறாத பட்சத்தில் தொடர்ந்தும் இத்தகைய விதிவிலக்கு கலாசார நிலைமை தொடர்வதனை ஊக்கப்படுத்துவதாவே அது அமையுமென்றும் அதேவேளை, அது நாட்டுக்கும் அனைத்து மக்களுக்கும் மிக பாரதூரமான விளைவுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தும் என்றும் அவர் ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளார்.

இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீராவியடி பிள்ளையார் கோவில் பல நூற்றாண்டு கால வரலாறு கொண்ட ஒரு புராதன கோவிலாகும்.

இந்த பிரதேசத்தில் தமிழ் மக்களே பெரும்பான்மையானவர்கள். அவர்கள் இந்து மதத்தினைச் சார்ந்தவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒரு பௌத்த துறவி இந்த நிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியினைக் கைப்பற்ற முயற்சித்து அங்கே நிலைகொள்ள எத்தனித்தார். குறித்த நிலத்தினை ஆக்கிரமிக்கும் பௌத்த துறவியின் முயற்சிக்கு தமிழ் இந்துமக்கள் தொடந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியதோடு இதுதொடர்பில் ஒருமுறுகல் நிலைதொடர்ந்தும் காணப்பட்டு வந்தது.

குறித்த பௌத்த துறவி அண்மையில் கொழும்பில் காலமானார். அவரது பூதவுடலை நீராவியடிபிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவேண்டுமென்றே உணர்ச்சினைகளை தூண்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு செயலாகும்.

இந்தவிடயம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது கடந்த செப்டம்பர் 22ம் திகதி குறித்த துறவியின் பூதவுடலை நீராவியடி பிள்ளையார் தேவஸ்தான பூமியில் தகனம் செய்வதற்கான தடைஉத்தரவினை முல்லைத்தீவு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் 23செப்டம்பரில் குறித்த துறவியின் பூதவுடலை ஆலயவளாகத்தில் தகனம் செய்வதனை தடைசெய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி குறித்த இறுதிக் கிரியைகள் அண்மையில் உள்ள பிறிதொரு காணியில் இடம்பெறவேண்டியதாயிற்று.

நீதிமன்ற கட்டளையை மீறி பிரேதம் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அண்டிய பகுதியில் தகனம் செய்யப்பட்டது. தீர்த்தக்கேணியில்தான் தெய்வத்தின் பல்வேறு தேவைக்காக புனித நீர் சேர்த்து வைக்கப்படுகின்றது. இச்செயலினால் ஆலயமும் அதன்பூமியும் தனது புனிதத் தன்மையை இழந்துள்ளது. சைவமக்கள் தங்களுடைய நெருக்கமான உறவினர் இறந்த பின்னர் குறைந்தது ஒரு மாதகாலம் வரை ஆலயத்தினுள்ளோ அதன் பூமிக்கோ செல்வதில்லை

நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்காக அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்த பொலிசார் நீதிமன்றத் தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலயவளாகத்தில் தகனம் செய்வதற்குத் துணையாகஇருந்தனர்.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளானது சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அமைப்புகளின் இயலாமையையே எடுத்துக்காட்டுவதுடன் நீதிமன்றத் தீர்ப்பினை மதிக்காத நீதிமன்ற அவமதிப்பு குற்றம் வரை சென்றுள்ளது. இந்த விடயங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் சம்பந்தன் எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார். (ஸ)

Mon, 09/30/2019 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை