அணிகளை கொள்வனவு செய்யும் உரிமையாளர்களுக்கு அழைப்பு

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'மன்னார் பிறீமியர் லீக் ' என்னும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது நடாத்தப்படவுள்ள நிலையில், மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் நிர்வாகத்தினருக்கும் அணிகளை கொள்வனவு செய்யவுள்ள உரிமையாளர்களுக்குமான 1ஆவது விசேட கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிறு (29) காலை 11 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உதைபந்தாட்டத்தில் தலைசிறந்து மிளிர்ந்து கொண்டிருக்கும் மன்னார் வீரர்களின் உதைபந்தாட்ட திறனை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் இச்சுற்றுப்போட்டியை மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் ஒழுங்கு செய்துள்ளது.

இது வரை காலமும் நடை பெறாத அளவில் மிக பிரமாண்டமான அளவில் இச்சுற்றுப்போட்டியானது நடாத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இச்சுற்றுப்போட்டியில் 8 அணிகள் மாத்திரம் பங்குபற்றும். போட்டிகள் யாவும் லீக் முறையில் மிக கோலாகலமாக நடைபெறும்.

இவ் 8 அணிகளின் உரிமையாளர்களும் அணிகளைக் கொள்வனவு செய்வதற்காக வெளிப்படையாக அழைக்கப்படுகின்றனர். மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இவ்வணிகளைக் கொள்வனவு செய்யலாம்.

இப்போட்டியில் 1ஆம் இடத்திற்கு ரூ.10 இலட்சமும் ,2ஆம் இடத்திற்கு ரூ.5 இலட்சமும் ,3ஆம் இடத்திற்கு ரூ.2 இலட்சமும் பணப்பரிசாக வழங்கப்படும்.

இத்துடன் மேலும் பல பெறுமதியான பரிசுகள் வீரர்களுக்கு வழங்கப்படவுள்ளது.வீரர்களின் கொள்வனவு மற்றும் போட்டி விதிகள் தொடர்பாக அணிகள் யாவும் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் அவ்வணிகளை கொள்வனவு செய்த உரிமையாளர்களுடன் கலந்தாலோசிக்கப்படும்.

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் நிர்வாகத்தினருக்கும் அணிகளை கொள்வனவு செய்யவுள்ள உரிமையாளர்களுக்குமான 1ஆவது விசேட கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிறு (29) காலை 11 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உரிமத்தை பெறவுள்ள சகல மன்னார் மாவட்டத்தை சேர்ந்த உதைபந்தாட்ட ஆர்வலர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் குறூப் நிருபர்

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை