ஊடகவியலாளர்களுக்கு நைற்றாவின் தேசிய தொழிற் பயிற்சித் தகைமைச் சான்றிதழ்

விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை (NAITA - National Apprentice and Industrial Training Authority) கீழ் ஊடகவியலாளர்களும் அரச அங்கீகாரம் பெற்ற  NVQ-4 National Vocational Qualification  Level தேசிய தகைமைச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயத்துக்கு விண்ணப்பிப்தற்கான இறுதித் தினம் செப்டம்பர் 27 என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இன் தலைவர் என்.எம். அமீன் விண்ணப்பம் செய்வதற்கான கால எல்லையை சற்று நீடிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததற்கு அமைவாக தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் தலைவர் இஷட். ஏ. நஸீர் அஹமட் இந்த திகதியை ஒக்டோபர் 6 வரை நீடித்து இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த வேண்டுகோளை கரிசனைக்கு எடுத்துக் கொண்டு செயலாற்றிமையக்காக நைற்றாவின் தலைவர் நஸீர் அஹமட்டுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இன் சார்பாக தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாக என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல பாகங்களிலுமுள்ள நைற்றா மாவட்டக் காரியாலயங்களில் இதற்கான விண்ணப்பப்படிவங்களைப் பெற்று அவற்றைப் பூர்த்தி செய்து ஒக்டோபர் 6ஆம் திகதிக்கு முன்பாகவோ அல்லது அன்றைய தினமோ கையளிக்க முடியும்.

சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் இதற்கான தேர்வுகள் மாவட்ட ரீதியாக நடத்தப்படவுள்ளன.

இத்துறையில் பன்னெடுங்காலமாகப் பணியாற்றிவருபவர்களும் இத்துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள விரும்புவோரும் இந்த சான்றிதழைப் பெற்றுக்கொள்வதன் மூலமாகப் பல்வேறு பயன்களை அடைய முடியும்.

க.பொ.த உயர்தரத்துக்குச் சமனாக இந்தச் சான்றிதழ் அரச அங்கீகாரம் பெற்றுள்ளதால் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு இது பெரும்துணை புரியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(வடிவேல் சக்திவேல் - பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Sun, 09/29/2019 - 15:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை