முல்லைத்தீவு,கிளிநொச்சி காணி விடுப்பு; ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் படைத்தரப்பு, பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் கலந்துரையாடல் நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இந்த கலந்துரையாடல் முதற்கட்டமாக நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடலின் போது படைத்தரப்பு, பொலிஸார், திணைக்களங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் ஒவ்வொருவர் அடங்கலாக மாவட்ட ரீதியிலான குழு நியமிக்கப்பட்டு அவர்கள் தனியார் காணிகளை அடையாளம் கண்டு இது தொடர்பிலான மேலதிக விபரங்களை சேகரிக்குமாறும், அந்த விபரங்களின் அடிப்படையில் எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெறும் என்றும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். 

வடமாகாணத்தில் படைத்தரப்பு , பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்கள் காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்துவருவார்களாயின் அவர்கள் உடனடியாக தமது காணிகளை பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். 

இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்காந்தராசா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள், கிளிநொச்சி மற்றும் வன்னி படைகளின் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Sat, 09/14/2019 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை