என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா யாழ்ப்பாணத்தில் இன்று கண்காட்சி ஆரம்பம்

பிரதமர் ரணில் அதிதி;அமைச்சர்களும் பங்கேற்பு

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றது.

கண்காட்சியை நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை 10.00 மணிக்கு திறந்து வைப்பார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாலை 4 மணிக்கு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைப்பார்.

இந்த கண்காட்சியின் மூலம் பத்தாயிரம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க எதிர்ப்பார்த்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது. இது வரை இந்நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென 90 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார். தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கருகில் எடுத்துச் செல்வதை நோக்காகக் கொண்டும் இக்கண்காட்சி இன்று முதல் 10ஆம் திகதி வரை யாழ். கோட்டை முற்றவெளி மைதானத்தில் நடைபெறுகிறது.

வடக்கின் தனித்துவமான பல்வேறு துறை தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை வலுப்படுத்தவும் புதிய தலைமுறையினரின் தொழில்முயற்சி எதிர்பார்ப்புக்களை மேம்படுத்துவதும் இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும் எனவும் நிதிமைச்சு தெரிவித்தது.

யாழ். மாவட்டத்தின் தனித்துவமான கைத்தொழில் துறைகளை மேம்படுத்தும் நோக்கில், கைத்தொழில், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா துறைகளுக்கு முன்னுரிமையளித்து, வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான குறைந்த வட்டியில் கடன்களை வழங்குவதை நடைமுறைப்படுத்துவதும் இந்த செயற் திட்டத்தின் நோக்கமாகும்.

இதில் தொழில் முயற்சியாளர்கள் பிரிவு, அரச மற்றும் தனியார் துறை பிரிவு, கல்விப் பிரிவு, பசுமை பிரிவு, புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவு, வணிகப் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு ஆகிய 07 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கண்காட்சி நிலையத்துக்கு வருகை தரும், இலட்சக்கணக்கான பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கென, கல்விப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியை பார்வையிட வருபவர்கள், மலிவு விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். அதேவேளை, கண்காட்சியின் நான்கு நாட்களும், அரச நிறுவனங்களினால் நடாத்தப்படும் ஏராளமான நடமாடும் சேவைகளும் செயற்பாட்டில் இருக்கும்.

காலை 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், தினமும் நாட்டின் பிரபலமான இசைக்குழுக்கள் மற்றும் பிரபல பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

 

 

Sat, 09/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை