மட்டக்களப்பு, கரடியனாறில் கட்டுத்துப்பாக்கி வெடித்து சிறுவன் பரிதாப உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறில் கட்டுத்துப்பாக்கி வெடித்து சிறுவன் பரிதாப உயிரிழப்பு-Domestic Gun Misfire-14 Yr Old Dead

வேட்டைக்குச் சென்றபோது சம்பவம்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கித்துள் சர்வோதய நகரைச் சேர்ந்த ஶ்ரீகாந்த் தனுஜன் என்னும் 14 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மூவருடன் குறித்த சிறுவன் வேட்டைக்கு சென்ற நிலையில் அவர்கள் கொண்டுசென்ற கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் அவர்களுடன் சென்ற சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

இதன்போது குறித்த சிறுவன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோதிலும் இடையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் சடலம், மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பில் வேட்டைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் தந்தை யுத்தத்தில் உயிரிழந்தவர் எனவும், தாய் வேறு திருமணம் செய்து சென்ற காரணத்தினால் உறவினர் வீட்டில் குறித்த சிறுவன் வசித்துவந்ததாகவும் தகவல்கள்  தெரிவிக்கப்படுகின்றது.

(வெல்லாவெளி தினகரன் நிருபர் - க. விஜயரெத்தினம், கல்லடி குறூப் நிருபர் - உதயகாந்த் உதயகுமார், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன், மட்டக்களப்பு நிருபர் - ஜவ்பர்கான்)

Sun, 09/29/2019 - 13:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை