பொது மக்களின் பங்களிப்புடன் திறந்து வைப்பு
இரு மாணவிகளின் உயிர்களை காவுகொண்ட பாலத்திற்கு பதிலாக புதிய பாலத்தினை பொதுமக்கள் மற்றும் அக்கரபத்தனை பொலிஸார் இணைந்து பாதுகாப்பு வேலியுடன் அமைத்து கொடுத்துள்ளனர். அக்கரப்பத்தனை அலுப்புவத்தை தோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 வயதுடைய இரண்டு சகோதரிகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமான முறையில் உயிர் இழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.
பாலத்தின் இரு பக்கங்களிலும், பாதுகாப்பு கம்பிகள்,இல்லாமையே மாணவிகள் இறந்தமைக்கான காரணமாகும்
இத்தோட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பாதையின் ஊடாக டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு சென்று வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டவுடன் மலையக அரசியல் வாதிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உடனடியாக பாலத்தினை கட்ட போவதாக மக்கள் மத்தியில் ஆளுக்கு ஆள் முண்டியடித்துக்கொண்டு வாக்குறுதிகள் வழங்கிய போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மழைக்காலங்களில் மாணவர்கள் பாதுகாப்புடன் செல்வதற்காக அக்கரப்பத்தனை 475 ஜே எல்பத்த கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் நடராஜா நவராஜாவின் ஏற்பாட்டில் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் பிரதேச நலன் விரும்பிகளின் பூரண பங்களிப்புடன் இந்தப் பாலம் புனரமைப்பு செய்யப்பட்டது.
ஹற்றன் விசேட நிருபர்
from tkn