புதிய அரசியலமைப்பு பற்றி கூறி வடக்கு மக்களை ஏமாற்ற முயற்சி

புதிய அரசியலமைப்பை கொண்டுவருவோமென கடந்த நான்கரை வருடகாலமாக வடக்கு மக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றியிருந்த நிலையில் தற்போது மீண்டும் அவ்வாறான கருத்துகள் மூலம் வடக்கு மக்களை ஏமாற்ற அவர் தயாராகியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தளை மாவட்ட சம்மேளன கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வித தவறுகளையும்

செய்யவில்லை. நாம் எமது தலைவருடன் இணைந்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு, பொதுஜன பெரமுனவின் சகோதரர்களையும் இணைத்துக் கொண்டு கடந்த 4 நான்கு வருடங்களாக பயணித்தோம். எனினும், அங்கிருந்தவர்கள் எங்களது வயிற்றில் அடிக்கவே செய்தார்கள்.

நாங்கள் பின்வாங்கவில்லை. நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தாலும் நாம் அவ்வாறு செய்ய வில்லை. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எங்களது தலைவருக்கு ஊக்கம் அளித்தோம். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர கூறினார்கள்.

19 இல் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இன்றுவரை 20 கொண்டு வரப்படவில்லை.

பிரதமருக்கு வடக்கு மக்கள் தொடர்பில் திடீரென அக்கறை வந்துள்ளது. கடந்த நான்கரை வருடங்களாக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதாக வடக்கு மக்களை அவர் ஏமாற்றியிருந்தார். மீண்டும் வடக்கு மக்களை ஏமாற்றுவதற்காகவே போலி வாக்குறுதிகளை அவர் வழங்கி வருகிறார் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை