பிரதமரை தேர்ந்தெடுப்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்துங்கள்

2020 இல் நாமே அரசமைப்போம்

சு.க 68ஆவது மாநாட்டில் ஜனாதிபதி உரை

அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவர சட்ட ஆவணங்கள் தயார்

நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முயற்சிகளை விடுத்து பிரதமரை தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலமுடன் செயற்படவேண்டுமென்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் மாநாட்டோடு ஜனாதிபதி தேர்தலுக்கான செயற்பாட்டை ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி 2020 இல் நாமே அரசாங்கத்தை அமைப்போம் என்றும் தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் குற்றவாளியான அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுவிட்டன என குறிப்பிட்ட ஜனாதிபதி, அதில் சம்பந்தப்பட்ட உயர் பொறுப்பாளர்களையும் சிறையில் அடைப்பதற்கு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய வங்கி கொள்ளைக்காரர்கள் அனைவரும் அரசியலிலிருந்து தூக்கி எறியப்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டவர்களே இப்போது அடுத்த தேர்தல் பற்றி பேசுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் 68ஆவது மாநாட்டுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 68ஆவது பிறந்த நாளும் நேற்று நினைவுகூறப்பட்ட நிலையில் மாநாட்டில் அவருக்கு அனைவராலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் டி. எம். ஜயரத்ன உட்பட அமைச்சர்கள், கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 68 வருடங்கள் நிறைவுற்ற நிலையில் அதன் வரலாறு சகலரும் அறிந்ததே. நாட்டின் தேசியம், கலாசாரம், மொழி, மதம் அனைத்தையும் மதித்து பாதுகாத்து செயற்பட்டது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே.

தற்போது நாட்டில் உள்ள கட்சிகளில் அரசியல்வாதிகள் எத்தனை பேர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயல்படுகின்றனரென நான் நாட்டு மக்களை கேட்க விரும்புகிறேன்.

 

நாட்டின் இறைமை கலாசாரத்தை பாதுகாத்து ஊழல் மோசடியற்ற நாட்டை கட்டியெழுப்ப செயற்படுபவர்கள் எத்தனை பேர்?

தமது சொந்த நிகழ்ச்சி நிரலின்படி செயற்பட்டு நாட்டைப் பற்றி சிந்திக்காமல் தவளைகள் போல அங்குமிங்கும் கட்சி தாவித் திரிவதிலேயே அவதானமாக செயற்படுகின்றனர்.

அவ்வாறான தலைவர்களே இன்று நாட்டில் மாற்றமுடியாத பிரச்சினைகளாகி உள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரலாற்றில் நேர்மையான ஊழல் அற்ற கட்சியாகும் . அந்த கட்சியின் சிந்தனையும் நோக்கமும் நேர்மையானது. அத்துடன் அனைத்து இன மக்களையும் இணைத்துக்கொண்டு செயற்படும் கட்சியாக அது திகழ்கிறது.

நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்து தெரிவு செய்யப்படவுள்ள நாட்டுக்கான சரியான பாதை எது? அதற்கான தலைவர்கள் யார்? முறையான தலைமைத்துவப் பாதை எந்த கட்சியில் உள்ளது என்பதிலேயே அனைவரும் சிந்தித்து வருகின்றனர்.

ஊடகங்கள் எத்தகைய கருத்துக்களையும் கூறமுடியும். எனினும் நாட்டை முன்னேற்றுவதற்கான தீர்மானம் அரசியல் தலைவர்களிடமே உள்ளது. அபிவிருத்தியின் பயனை பெற்றுக்கொள்ளும் உரிமையை சாதாரண மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டிய அவசியம் நாட்டின் நிலையான அபிவிருத்தி தொழில்நுட்ப முன்னேற்றம் அவசியம், ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்பி நாட்டின் சட்டம் சகலருக்கும் சமமானதாக அமைவது முக்கியம்.

நான் 2015ஆம் ஆண்டு பெரும் சவால்களை வெற்றிக்கொண்டோம். அது தற்போது பலருக்கு மறந்துள்ளது. நாம் மக்களுக்கு சிறந்தவற்றை நடைமுறைப்படுத்தும்போது மற்றத்தரப்பு நாட்டுக்கு பொருத்தமில்லாத செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. பிரபுத்துவ அரசியலை கடைப்பிடித்து அனைத்தையும் வர்த்தக மயமாக்கவே அவர்கள் செயற்பட்டனர். அத்தகைய மோசமான அரசியலை இல்லாதொழிப்பதே எனது பொறுப்பாகியது. நாடு தற்போது மோசடி வர்த்தகர்களின் பிடியின் அகப்பட்டுள்ளது. பிரபுத்துவ வர்த்தக அரசியலே நடைமுறையிலுள்ளது.

கடந்த நாலரை வருடங்களாக நாட்டுக்காக செயற்படமுடியாது இத்தகையோருக்கு எதிராக செயற்படுவதிலேயே எனதுகாலம் கழிந்தது.

அவ்வாறு நான் செயற்பட்டிருக்காவிட்டால் நாடு இதைவிட மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். 2015 இல் தமது தெரிவு தவறிவிட்டதாக ஒரு அனுபவமில்லாத அரசியல்வாதி கூறியிருக்கிறார். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்காவிட்டால் மேலாடையல்ல. கோவனத்துணியையும் அவர் இழக்க நேர்ந்திருக்கும் என அவருக்கு நான் கூற விரும்புகிறேன்.

கொழும்பு மாநகர சபை உட்பட 100க்கு 99 வீதமான உள்ளூராட்சி சபைகளின் ஊழலும் மோசடியும் தலைவிரித்தாடுகிறது.

நாட்டில் ஊழல் மோசடி இல்லாத நிறுவனங்கள் உள்ளனவா என்று தேடிப்பார்க்கவேண்டியுள்ளது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் தற்போதைய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய வங்கி கொள்ளைக்காரர்கள் அனைவரும் அரசியலிலிருந்து தூக்கி எறியப்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டவர்களே இப்போது அடுத்த தேர்தல் பற்றி பேசுகின்றனர்.

மத்திய வங்கி பிணைமுறியின் முக்கிய சந்தேக நபரான அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உரிய ஆவணங்கள் தயாராகிவிட்டது.

அத்துடன் சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிகளை சிறையில் அடைப்பதற்கான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுவிட்டன.

நாட்டின் மாகாண சபை முறைக்கு ஆணி அடிக்கப்பட்டுவிட்டது. மாகாண சபை தேர்தலை நிறுத்துவதற்கான முக்கிய நபராக பிரதமர் செயற்படுகின்றார். அதில் முதல் பிரதிவாதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முக்கிய பொறுப்புள்ளது. நேர்மையான அரசியல் தலைமை நாட்டுக்கு தேவையாக உள்ளது.

தற்போது அரசாங்கமும் எதிர்க் கட்சியும் மீண்டும் வடக்கு தமிழ் தலைவர்களிடம் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். புதிய அரசியலமைப்பு கொண்டு வருவதாக நாலரை வருடங்களை வீணடித்து கோடிக்கணக்கான நிதியை விரயம் செய்துள்ளனர். எவருக்கும் எந்த திட்டமும் கிடையாது.

அடுத்து வரும் ஜனாதிபதி 19ஆவது திருத்தத்தின் படி எத்தகைய அதிகாரமும் இல்லாதவராகவே இருப்பார். பாதுகாப்பு அமைச்சு கூட அவரின் கீழ் இருக்காது. பிரதமருக்கே சகல அதிகாரமும் இருக்கும். அந்தவகையில் 2020 இல் ஜனாதிபதி அன்றி பிரதமரே பலமுள்ளவராக இருப்பார். நாம் அதனை உணர்ந்து செயற்படவேண்டும்.

நான் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்து எந்த ஊழல் மோசடிகளிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டவன் அல்ல. நாட்டின் எந்த பிரஜைக்கும் எதிராகவும் எனது காலத்தில் துப்பாக்கி வெடித்ததில்லை. வீடுகளை எரிப்பதோ, ஊடகவியலளர்களை தாக்குவதோ எனது ஆட்சியில் இடம்பெறவில்லை.

மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழ்நிலையையே நாம் ஏற்படுத்தினோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 09/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை