சு.க - பெரமுன பேச்சு தோல்வியடைந்தால் மைத்திரியே சு.க வின் ஜனாதிபதி வேட்பாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடையுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொதுஜன பெரமுனவுடன் இணைவதா-? இல்லையா? என்பது தொடர்பில் ஒரு வாரத்துக்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர் தற்போது அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவி்க்கையிலேயே மஹிந்த அமரவீர எம். பி. இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில்,

ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதென தீர்மானித்துள்ளது. சின்னம் ஒரு பிரச்சினையல்ல. வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதே எமது நோக்கமாகும். அந்தவகையில் பேச்சுவார்த்தை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. எனினும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் வேட்பாளரை நிறுத்தும்.

மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. இரு கட்சிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் கொள்கையளவில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. சின்னம்தொடர்பிலேயே தொடர்ந்தும் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.

செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் தாமரைக் கோபுர அங்குரார்ப்பண விழாவில் ஜனாதிபதி தெரிவித்த கூற்று இரு கட்சிகளினதும் இணக்கத்துக்கான பேச்சுவார்த்தைக்கு தடையாக அமையுமா? என கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த மஹிந்த அமரவீர, ஒருபோதும் அக் கூற்று தடையாக அமையாது. எல்லா அரசாங்கக் காலத்திலும் அதிகாரிகளினால் மோசடிகள் இடம்பெற்றன. குறிப்பாக இந்த அரசாங்கத்தின் காலத்தில் பிணைமுறி மோசடி தொடர்பில் அர்ஜுண மகேந்திரனின் மோசடியைக் குறிப்பிட முடியும். அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபட்டால் அதனை வெளிப்படுத்துவதும் விசாரணை செய்வதும் இயல்பானது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை