அனைத்து மக்களும் சமமாக வாழும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

 நாட்டில் கடந்த காலத்தைப்போன்றே இம் முறையும் கூட்டணியின்றி எவராலும் ஆட்சியைக் கைப்பற்ற இயலாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி முற்போக்கு முன்னணியாக ஒன்றிணைபவர்களாலேயே வெற்றி பெற முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த ஜனாதிபதி,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டுக்காக அரசியல் செய்யும் குழுவினரின் முன்னணியை உருவாக்க வேண்டும்.

திருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணைபோகாது.

இன்று வலுப்பெற்று வரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொள்ளவும் முடியாது.

எதிர்வரும் காலங்களில் உருவாகும் புதிய அரசாங்கம் நாட்டை நேசிக்கும் தேசப்பற்றுடைய அனைத்து இனப் பிரிவுகளுக்கிடையே நம்பிக்கையை உறுதி செய்யக்கூடிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

நாட்டின் அனைத்து மக்களும் சமமாக வாழக்கூடிய உரிமையை உறுதி செய்வது காலத்தின் கட்டாயமா கும். அந்நிய நாட்டு சக்திகளுக்கு அடிபணியாத அரசாங்கம் ஒன்று எதிர்வரும் காலங்களில் உருவாக வேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தவிர்த்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு கட்சிகளும் தூதுவராலயங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன. நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஊழல் சக்திகளை தோல்வியடையச் செய்யும் மக்கள் நேய வேலைத்திட்டமொன்று நாட்டுக்கு தேவையாக இருப்பதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடையாளம், அபிமானம் மற்றும் கட்சி உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுக்கும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, மனோஜ் சிறிசேன மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (ஸ)

 

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை