டோரியன் புயல் தொடர்பில் டிரம்ப் வரைபடத்தால் சர்ச்சை

டோரியன் புயல் நகர்வு குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தவறான ட்விட்டர் பதிவை நியாயப்படுத்தும் வகையில் வரைபடம் திருத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மிக பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் 5ஆம் வகைப் புயலாக மாறி பஹாமஸ் தீவுகளை சிதைத்த டோரியன் புயல், அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை நோக்கி நகர்கிறது. ஜார்ஜியா, தெற்கு மற்றும் வடக்கு கரோலினா, விர்ஜீனியா கடலோரப் பகுதிகளில் அது இன்று வரை கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டோரியன் புயல் அலபாமா மாநிலத்தை தாக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

டோரியன் புயல் அலபாமாவைத் தாக்கும் என்று எந்த ஒரு அதிகாரப்பூர்வ வரைபடமும் கூறாத நிலையில், அவர் இப்படி பதிவிட்டதால் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டோரியன் புயல் நகர்வு குறித்த வரைபடத்தைக் காண்பித்தார். அதில், அலபாமாவையும் டோரியன் தாக்கும் என்பதைக் குறிப்பிடும் வகையில் கறுப்பு வண்ணத்தில் திருத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இது திருத்தப்பட்ட வரைபடமா? என்று கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என டிரம்ப் பதில் அளித்தார். ஆனால், அலபாமாவை டோரியன் தாக்க வாய்ப்பில்லை என தேசிய புயல் மையம் கூறியுள்ளது. புயல் தொடர்பான அதிகாரப்பூர்வ வரைபடத்தைத் திருத்துவது சட்டவிரோதமாக பார்க்கப்படும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் வெள்ளை மாளிகையில் நடைபெற்று இருப்பது சர்ச்சையாகியுள்ளது.

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை