பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை தோல்வி

தெற்காசிய இளையோர் கால்பந்து தொடர்:

நேபாளத்தில் இடம்பெறும் 18 வயதுக்கு உட்பட்ட தெற்காசிய கால்பந்து சம்மேளன கிண்ண தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் இளையோர் அணியிடம் 3–0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

மூன்றாவது முறையாக இடம்பெறும் 18 வயதுக்கு உட்பட்ட தெற்காசிய கால்பந்து சம்மேளன கிண்ண தொடரில் இணைவதன்மூலம் இலங்கை அணி முதல் முறையாக இந்த தொடரில் பங்கேற்கின்றது.

கத்மண்டு, ஏ.பீ.எப். அரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், போட்டி ஆரம்பித்த விரைவிலேயே பங்களாதேஷ் அணி கோல் ஒன்றை புகுத்தி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்ததோடு இரண்டாவது பாதியின் கடைசி நிமிடங்களில் பங்களாதேஷ் மத்தியகள வீரர் பாஹிம் மொர்ஷத் மற்றும் அஹமட் பாஹிம் ஆகியோர் கோல் புகுத்தினார்.

நேபாளத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இலங்கை பி குழுவில் ஆடுவதோடு இலங்கை தனது இந்த முதல் போட்டியில் தோற்ற நிலையில் அரையிறுதிக்கு முன்னேற போராட வேண்டி உள்ளது.

இந்த தொடரின் குழுநிலையில் ஓர் அணிக்கு இரண்டு போட்டிகளே உள்ள நிலையில் இலங்கை அடுத்து வரும் புதன்கிழமை (25) இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

போட்டி ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே இலங்கை வீரர் விட்டுக்கொடுத்த கோனர் கிக் வாய்ப்பு பங்களாதேஷ் அணிக்கு கோல் வாய்ப்பாக மாறியது. அந்த கோனர் கிக்கை பங்களாதேஷ் வீரர் தன்பிர் ஹொஸைன் உயரப் பாய்ந்து தலையால் முட்டி கோல் ஒன்றை பெற அந்த அணி போட்டியின் ஒருசில வினாடிகளிலேயே முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்தில் இலங்கை வீரர்கள் பங்களாதேஷ் பின்களத்திற்கு நெருக்கடி கொடுத்தனர். 48 ஆவது நிமிடத்தில் ஷெனால் சந்தேஷ் எதிரணி கோல் கம்பத்திற்கு பந்தை வேகமாக கடத்திச் சென்ற நிலையில் பெனால்டி பெட்டிக்குள் வைத்து தடுக்கி விழுந்ததால் கோல் வாய்ப்பு ஒன்று பறிபோனது.

எவ்வாறாயினும் 77 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோனர் கிக்கை பயன்படுத்தி பங்களாதேஷ் வீரர் பாஹிம் மொர்ஷத் பந்தை வலைக்குள் புகுத்தினார். இதன் மூலம் 2–0 என முன்னிலை பெற்ற பங்களாதேஷ் கடைசி நிமிடங்களில் இலங்கை கோல் கம்பத்தை அடிக்கடி ஆக்கிரமிப்பதை காணமுடிந்தது.

இந்நிலையில் 86 ஆவது நிமிடத்தில் பங்காதேஷ் முன்கள வீரர் அஹமட் பாஹிம் எந்த நெருக்கடியும் இன்றி இலங்கை பெனால்டி பெட்டிக்குள் பந்தை கடத்தி வந்து வலைக்குள் செலுத்தி பங்களாதேஷ் அணியை 3–0 என முன்னிலை பெறச் செய்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் கடைசி நிமிடங்களில் இலங்கை அணியால் எதிரணி பக்கத்தை நோக்கி பந்தை கடத்திச் செல்ல முடியாத நிலையில் அந்த அணியால் ஆறுதல் கோல் ஒன்றைக் கூட போட முடியாமல்போனது.

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை