ரணில் - சஜித் நாளை சந்திப்பு

முறுகல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருவரும் இணக்கம்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து முறுகல் நிலை காணப்பட்டு வரும் சூழ்நிலையில் இறுதி இணக்கப்பாடொன்றை எட்டும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் நாளை தனியாக நேருக்கு நேர் சந்திக்க விருக்கின்றனர்.

நேற்று அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய சந்திப்பில் அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், ஜோன் அமரதுங்க, ஜயவிக்ரம பெரேரா, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல, வஜிர அபேவர்தன உட்பட மற்றும் சிலர் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கக் கோரும் 54 எம்.பிக்களின் கையொப்பக் கடிதம் குறித்துப் பேசப்பட்டபோது, கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,.. தங்களது விருப்பத்தைக் கோரும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

 அதனை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் கட்சி யாப்புக்கமைய கட்சி செயற்குழுக் கூட்டத்திலும், பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலும் பேசியே வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார். இங்கு சஜித் பிரேமதாசவை நாட்டு மக்கள் கேட்கின்றனர். மக்கள் எதிர்பார்ப்பவரையே கட்சி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கபீர் ஹாஷிமும், மலிக் சமரவிக்கிரமவும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கபீர் ஹாஷிமுக்கும் லக்ஷ்மன் கிரியெல்லவுக்குமிடையே சிறிய வாய் தர்க்கம் இடம்பெற்றுள்ளது.

அதனை பிரதமர் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார். கட்சியின் வேட்பாளர் தெரிவு தாமதப்படுத்தப்படுவது ஆரோக்கியமான தல்லவென இங்கு பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்சியின் வேட்பாளர் பட்டியலில் ரணில், கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ ஆகிய மூவரதும் பெயர்கள் காணப்படும் நிலையில் சஜித் தரப்பினர் நாடு பூராவும் மக்களாதரவைத் திரட்டும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கட்சியின் அங்கீகாரமின்றி தன்னிச்சையாக கூட்டங்கள் நடத்தப்படுவதை கட்சியின் உயர்மட்டம் கடுமையாக கண்டித்துள்ளனர்.

கட்சித் தலைமைக்கோ மத்திய குழுவுக்கோ அறிவித்து அனுமதி பெறாமல் கூட்டங்கள் நடத்தப்படுவதன் மூலம் கட்சியின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்தும் செயலென இங்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். வேட்பாளர் யாரென கட்சியால் அறிவிக்கப்படாத நிலையில் தான் வேட்பாளர் என்று சஜித் அறிவித்து வருவதை கட்சியில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில் திங்கட்கிழமைக்குள் கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை இங்கு பலரும் சுட்டிக்காட்டி அவசரமாக முடிவெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை ஞாயிற்றுக்கிழமை சஜித் பிரேமதாசவை தனித்து நேருக்கு நேராக பேசி முடிவெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை இன்று சனிக்கிழமை காலை ஜனநாயக தேசிய கூட்டணியில் இணையும் கட்சிகளின் தலைவர்களும் பிரதமரைச் சந்தித்துப் பேசவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எம்.ஏ.எம். நிலாம்

 

 

 

Sat, 09/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை