அகில இலங்கை வீதி ஓட்டத்தில் சசிந்து, சசிகலாவுக்கு முதலிடம்

வவுனியாவின் நிசோபனுக்கும் வெற்றி

அகில இலங்கை பாடசாலைகள் வீதி ஓட்டப் போட்டியில் மாகந்துர மத்திய கல்லூரியைச் சேர்ந்த சசிந்து சன்கல்பவும், ஷசிகலா டில்ஷானியும் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டனர்

இதன் ஆண்கள் பிரிவில் கலந்துகொண்ட வவுனியா காமினி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கே. நிசோபன் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கமும், கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறைப் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் நெஸ்டமோல்ட் வீதி ஓட்டப் போட்டி கிரியுல்ல நகரில் கடந்த சனிக்கிழமை (14) நடைபெற்றது.

கடந்த காலங்களில் மரதன் ஓட்டப் போட்டிகளாக நடைபெற்றது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் தற்போது வீதி ஓட்டப் போட்டிகளாக நடைபெற்று வருகின்றது.

16 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் மாத்திரம் கலந்துகொள்ளும் இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியில் இருந்து 3000 வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்

14 கிலோ மீற்றர் தூரத் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த வாரம் நிறைவுக்குவந்த சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 1500 மீற்றர் மற்றும் 5000 மீற்றர் ஆகிய இரு ஓட்டப் போட்டிகளிலும் புதிய போட்டிச் சாதனைகளை நிலைநாட்டிய சசிந்து சங்கல்ப முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதேபோல, இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா மாவட்டத்தைச் பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய நிசோபன், முதல்முறையாக அகில இலங்கை பாடசாலைகள் வீதி ஓட்டத்தில் பங்குபற்றி இரண்டாவது இடத்தைப் பெற்று அசத்தினார்.

முன்னதாக இம்மாத முற்பகுதியில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுநரில் பங்குகொண்ட அவர் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5000 மீற்றர் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் ஆகிய போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

கடந்த வார இறுதியில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற வடக்கு மாகாண விளையாட்டு விழாவிலும் பங்கேற்ற அவர், ஆண்களுக்கான 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றதுடன், 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கப் பதக்கத்தினையும் சுவீகரித்தார்.

எனவே சுமார் 2 வாரங்கள் இடைவெளியில் 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று தனது அபார திறமையினை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் வவுனியாவின் முன்னாள் மரதன் ஓட்ட வீரரான நவனீதனிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

குறித்த போட்டியில் மூன்றாம் இடத்தை நக்காவத்த தேசிய பாடசாலையைச் சேர்ந்த லஹிரு லக்ஷான் பெற்றார்.

இது இவ்வாறிருக்க, பெண்கள் பிரிவில் முதலாவது இடத்தை மாகந்துர மத்திய கல்லூரியைச் சேர்ந்த சஷிகலா டில்ஷானி பெற்றுக்கொண்டார்.

இவர் அண்மையில் நிறைவுக்கு வந்த சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வேகநடைப் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலி தேவபத்திராஜ மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஹஷினி மதுஷிக்கா இரண்டாவது இடத்தையும், நாரந்தெனிய தேசிய பாடசாலையைச் சேர்ந்த டில்மினி மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதேநேரம், வவுனியா சரஸ்வதி வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெயராசா தனுஷியா ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இம்மாத முற்பகுதியில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுநரில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் வேகநடைப் போட்டியில் பங்குகொண்ட ஜெயராசா தனுஷியா வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பீ.எப் மொஹமட்

 

Sat, 09/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை