போலி தேசியவாதிகளால் நாட்டுக்கு பேராபத்து

சிங்கள மக்களை தவறாக  வழிநடத்துவதை நிறுத்த வேண்டும்

தேசிய தலைவர்கள் எனக் கூறி கொள்வோர் தென்னிலங்கை சிங்கள மக்களைத் தவறாக வழி நடத்தி வருவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மூத்த தலைவர் சேர். ராஸிக் பரீத் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுதி நூல் வெளியீட்டுவிழா நேற்று முன்தினம் (04) மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு சிறப்புரையாற்றும் போதே ஆர். சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சோனக இஸ்லாமிய கலாசார நிலையத் தலைவர் ஒமர் காமில் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் தொடர்ந்து உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியதாவது:

சிறுபான்மைச் சமூகங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதன் மூலம் நாட்டை மீண்டும் அழிவுக்குள் தள்ளிவிடும் அச்சுறுத்தலே காணப்படு கிறது.

போலித்தனமான தேசியவாதிகளால் நாடு பேராபத்துக்குள்ளே தள்ளப்படும். சுதந்திரமடைந்து 70 வருடங்களைக் கடந்த நிலையிலும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க தேசிய அரசியல் கட்சிகள் தவறிவிட்டன. தென்னிலங்கையின் தேசியத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோர், பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை தமது சுயநல அரசியலுக்காக பெற்றுக்கொள்வதிலே குறியாக இருக்கின்றனர்.

தங்களை தேசியவாதிகள் எனக் கொள்பவர்கள் பக்கச்சார்பாகவும், சிறுபான்மைச் சமூகங்களை ஏமாற்றுபவர்களாகவுமே செயற்படுகின்றனர். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

எம். ஏ. எம். நிலாம்

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை