'எலைட் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி' இறுதிப் போட்டியும் பரிசளிப்பும் ஞாயிற்றுக்கிழமை

மருதமுனை எலைட் விளையாட்டுக்கழகத்தின் 27வது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் 'எலைட் வெற்றிக்கிண்ண கிரிக்ெகட் சுற்றுப்போட்டி-2019' மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப.3.00 மணிக்கு மருதமுனை மசூர்மௌலான விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக எலைற் கிரிக்கெட் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் தெரிவித்தார்.

கழகத்தின் தலைவர் எம்.ஐ.நஜிமுல் றியாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு மருதமுனை இல்ஹாஸ் பூட் சிட்டி உரிமையாளர் பி.எம்.எம்.இல்ஹாஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அணிக்கு 11 பேர் கொண்ட 7 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெற்று வரும் இந்த சுற்றுப் போட்டியில் யுனிவர்ஸ், மருதம், கிறிஸ்டல், கல்பனா, மிமா, எலைற்,றோயல் , ஒலிம்பிக்,கோல்ட்மைன்ட்,றெட்விங்ஸ், பென்ஷீன் , பிரிஸ்பேன், கிங்ஸ்டன்,மெரிடியன், அக்பர், கிறஸ்ற் ஆகிய 16 அணிகள் விளையாடி வருகின்றன.

முதலாவது போட்டி மருதமுனை பென்சின், மருதம் அணிகளுக்கிடையில் (06) நடைபெற்றது. இந்த போட்டியில் மருதம் அணியினர் வெற்றி பெற்றனர். இரண்டாவது போட்டியில் எலைற் , றோயல் அணியிகள் விளையாடின. எலைற் அணியினர் இதில் வெற்றி பெற்றனர். சிறப்பு ஆட்டக்காறராக தெரிவான எச்.எம்.நஜாத், எம்.என்.எம்.சிபார் ஆகியோருக்கு ஆட்ட நாயகன் விருதுகளும் வழங்கப்பட்டன.

இரண்டாம் நாள் போட்டிகள் அனைத்தும் (7) ஆம் திகதி மருதமுனை மசூர் மௌலானா வி.மைதானத்தில் நடைபெற்றது. கிறிஸ்டல் - கிங்ஸ்டன் இடையிலான போட்டியில் கிரிஸ்டல் அணியும் மெரிடியன்- யுனிவர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் யுனிவர்ஸ் அணியினர் வெற்றி வாகை சூடினர். கல்பனா-மிமா அணிகளுக்கிடையிலான போட்டியில் 7 விக்கெட்டுகளினால் கல்பனா அணியினர் வெற்றி பெற்றனர். கிறஸ்ற்- றெட்விங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் கிறஸ்ற் அணி வெற்றி பெற்றன. மருதம் - அக்பர் அணிகளுக்கிடையிலான போட்டியில் மருதம் அணியினரும் யுனிவர்ஸ்-கோல்ட்மைன்ட் விளையாடிய போட்டியில் கோல்ட்மைன்ட் வெற்றி பெற்றன. பென்சின் - ஒலிம்பிக் அணிகளுக்கிடையிலான போட்டியில் பென்சின் அணி வெற்றி பெற்றன. கிங்ஸ்டன் - றெட்விங்ஸ் மோதிய போட்டியில் கிங்ஸ்டன் அணியினர் வெற்றி வாகை சூடினர்.

மூன்றாம் நாள் போட்டிகள் அனைத்தும் 8ஆம் திகதி நடைபெற்றன.இதில் கோல்ட்மைன்ட்- மெரிடியன் அணிகளுக்கிடையிலான போட்டியில் கோல்ட்மைன்ட் அணியும் ஒலிம்பிக் - அக்பர் அணிகளுக்கிடையிலான போட்டியில் அக்பர் அணியும் றோயல் - கல்பனா அணிகளுக்கிடையிலான போட்டியில் கல்பனா அணியும் கிறிஸ்டல் - கிறஸ்ற் அணிகளுக்கிடையிலான போட்டியில் கிறிஸ்டல் அணியும் வெற்றிபெற்றன. ஐந்தாவது போட்டியாக நடைபெற்ற யுனிவர்ஸ் - பிரிஸ்பேன் அணிகளுக்கிடையிலான போட்டியில் பிரிஸ்பேன் அணியும் அக்பர்- பென்ஷீன் அணிகளுக்கிடையிலான போட்டியில் பென்ஷீன் அணியும் ஒலிம்பிக் - மருதம் அணிகளுக்கிடையிலான போட்டியில் மருதம் அணியும் எட்டாவது போட்டியாக நடைபெற்ற மிமா - எலைற் அணிகளுக்கிடையிலான போட்டியில் எலைற் அணியும் வெற்றிபெற்றன.

நாளை சனிக் கிழமை ஏனைய போட்டிகள் நடைபெறவுள்ளன. நாளை மறுதினம் (15) ஞாயிற்றுக்கிழமை கால் இறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெறுவள்ளன. இறுதிப் பரிசளிப்பு நிகழ்வின் போது வெற்றி பெறும் சம்பியன் அணிக்கு 25000.00 ரூபா பெறுமதியான வெற்றிக்கிண்ணமும் இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 15000.00 ரூபா பெறுமதியான வெற்றிக்கிண்ணமும் தொடரின் சிறந்த பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர்களுக்கு 8000.00 ரூபா பெறுமதியான மின் விசிறிகளும் பரிசாக வழங்கப்படவுள்ளன.

சிறப்பு ஆட்டக்காரர்களுக்கான விருதுகள், விசேட பரிசுப் பொருட்கள், பார்வையாளர்களுக்கான சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் என பல பரிசுத்திட்டங்களும் வழங்கப்படவுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

பெரியநீலாவணை விசேட நிருபர்

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை