இலங்கையர் என்ற உணர்வில் முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்

மத்திய கொழும்பு அமைப்பாளர் ஏ.எல்.எம். உவைஸ்

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சிங்களவர், தமிழர், முஸ்லிம் மக்கள் அனைவரும் "இலங்கையர்" என ஒன்றிணைந்து ஒற்றுமையாய் கைகோர்க்க முன்வர வேண்டுமென ஸ்ரீல.பொ.பெ. மத்திய கொழும்பு அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட முஸ்லிம் அமைப்பாளருமான ஏ.எல்.எம். உவைஸ் தெரிவித்தார்.

கொழும்பு, மருதானையிலுள்ள ஸ்ரீல.பொ. பெரமுனவின் மத்திய கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"அரசியல் களங்களின் சமகாலப் பார்வை" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அவர் கூறியதாவது

நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

அரசாங்கத்தின் பொறுப்புக்கள் குறித்து அரசிடம் வினவுதற்கு மக்களுக்கு உரிமையுண்டு. மிகச் சிறந்த எதிர்காலத் திட்டமுடைய அரசாங்கத்தையே நாம் தெரிவு செய்ய வேண்டும். இதற்காக சகல மக்களினதும் கருத்துக்களைப் பெறுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன பல திட்டங்களை முன்வைத்துள்ளது. எமது கட்சியை வெறுப்பு, சந்தேகத்துடன் நோக்கும் மனநிலையிலுருந்து முஸ்லிம்கள் மாற வேண்டும். சுபீட்சமுள்ள எதிர்காலத்துக்காக, எம்முடன் இணைந்து கை கோர்க்குமாறு, அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சகல தொழிற் சங்கங்களுக்கும், தொழில் வல்லுநர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

நாட்டில் சமூக மாற்றத்தைக் காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், முதலில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தற்போது மக்கள் அரசியல் மாற்றம் ஒன்றையே விரும்பியும் வேண்டியும் நிற்கின்றனர்.

எதிர்காலத்தில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள, மத்திய கொழும்பை நான் தெரிவு செய்துள்ளேன். மத்திய கொழும்பு மக்கள் பல தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளனர். என்றாலும், முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் செயற்பாடுகள் எதுவும் இக்கட்சியால் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

 

 

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை