அம்பாறை சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 211ஆவது வருடாந்த பெரு விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் சிறப்பாக நிறைவு பெற்றது.
வருடாந்த பெருவிழா கடந்த 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஒன்பது தினங்களாக நவநாள் வழிபாடுகள் நடைபெற்றன.
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கு தந்தை எஸ்.இக்னேஸியஸ் தலைமையில் நடைபெற்ற இறுதிநாள் கூட்டுத் திருப்பலியை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை ஒப்புக் கொடுத்தார்.
திருச்சிலுவை திருத்தல திருப்பவனி ஆலயத்தை சுற்றி வலம் வந்து ஆசிர்வதிக்கப்பட்டதுடன் கொடியிறக்கப்பட்டு அன்னதானத்துடன் பெருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது.
இறுதிநாள் நிகழ்வில் பங்குத்தந்தையர்கள், கன்னியர்மட அருட்சகோதரிகள் உட்பட கிழக்கு மாகாணத்தின் பலபாகங்களிலிருந்தும் வருகை தந்த பெரும் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
ஆயர் பெற்றக்கனி அவர்களால் 1854 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இயேசு கிறிஸ்து மரித்த சிலுவையின் ஒரு சிறிய பகுதி இத்திருத்தலத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது இத்திருத்தலத்திற்கு மகிமையைக் கொடுக்கின்றமை சிறப்பம்சமாகும்.
சென்றல்கேம்ப் குறூப் நிருபர்
from tkn