பிரதமருக்கும் எனக்கும் எந்த முரண்பாடும் இல்லை

தனக்கும் பிரதமருக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது எனவும் எதிர்காலத்திலும் அவருடன் இணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி வடக்கு மற்றும் பாத்ததும்பர பிரதேசத்திற்கான ஒன்றிணைந்த பாரிய நீர்வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு தோரகமுவையில் சனிக்கிழமை (21) நடைபெற்றது. பிரதமர் ரணில்விக்ரமசிங்க இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, சீன கடனுதவித் திட்டத்திற்கு இந்த திட்டம் உள்ள டக்கப்படுவது குறித்து நான் நன்றி தெரிவிக்கிறேன்.கண்டி மாவட்டத்தின் பாரிய நீர் வழங்கல் திட்டமான கண்டி வடக்கு,பாத்ததும்பர ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 320 கிராம சேவகர் பிரிவினை சேர்ந்த 117 500 குடும்பகளுக்கான தூய குடிநீரை வழங்க முடியும். இதன் மூலம் சுமார் ஐந்து இலட்சம் (500,000 ) பயனடையவுள்ளனர். இலங்கை அரசினதும் சீன எக்சிம் வங்கியினதும் நிதிப்பங்களிப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது..இவ்வாறான பாரிய திட்டம் இதுவரை கண்டியில் முன்னெடுக்கப்படவில்லை. கண்டிக்கு இந்தத் திட்டத்தை வழங்கியது குறித்து பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்தவாரத்திற்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்து, இந்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவுவாரென நம்புகிறோம்.

அத்துடன் அரசாங்கத்தில் எங்களுக்குள் வாதப்பிரதிவாதங்கள் நடப்பது சகஜமானது . பிரதமருக்கு அது நன்றாகவே தெரியும்.நான் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதெல்லாம் எங்கள் மத்தியில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தக்கவைத்து முரண்பாடுகளை களைவதற்காகவே. நான் உணர்ச்சிவசப்படும் போதெல்லாம் பிரதமர் எனக்கு ஆறுதல்கூறி அமைதிப்படுத்தியிருக்கிறார். எனக்கும் பிரதமருக்குமிடையில் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக காட்ட சிலர் எத்தனிக்கின்றனர்.

எனக்கும் பிரதமருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.இதில் எந்த உண்மையும் கிடையாது. அது அவருக்கும் நன்கு தெரியும்.

 

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை