கைப்பணிப்பொருட்களுக்கு சந்தைவாய்ப்பு; மேல்மாகாண கண்காட்சியில் ஆளுநர்

பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களுக்குச் சிறந்த சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம், முஸம்மில் தெரிவித்துள்ளார்.

தேசிய கைவினைக் கவுன்சிலுடன் இணைந்து மேல் மாகாண கைத்தொழில் திணைக்களம் ஏற்பாடு செய்த 'பேலதிக விஸ்கம் 2019' மேல் மாகாண கைவினைக் கண்காட்சியும், போட்டி நிகழ்ச்சியும் கடந்த வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம், முஸம்மில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர், அரசாங்கம் இக்கலைஞர்கள் விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அவர்களுக்காகத் திணைக்களங்களையும் உருவாக்கியுள்ளது. இக்கலைஞர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்தக்கூடிய ஏற்பாடுகளிலும் கவனஞ் செலுத்தப் படுகிறது. அதேபோன்று அவர்களின் படைப்புகளுக்குத் தேவையான பொருட்களையும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கைககள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாண செயலாளர் பிரதீப் யசரத், தேசிய கைவினைக் கவுன்சிலின் தலைவர் ஹேஷானி போகொல்லாகம உட்படக் கலைஞர்கள் பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இக் கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் ஆளுநர் ஏ.ஜே.எம், முஸம்மில் வழங்கிவைத்தார்.

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை