ஒசாமா பின்லாடன் மகன் கொல்லப்பட்டது உறுதி

அமெரிக்காவின் தாக்குதல் ஒன்றில் அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லாடனின் மகன் ஹம்சா பின்லாடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

வான் தாக்குதல் ஒன்றில் அவர் கொல்லப்பட்டதாக உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தன. அவர் சர்வதேச தீவிரவாதியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவால் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

ஹம்சா பின்லாடன் தனது தந்தையை அடுத்து அல் கொய்தா தலைமை பொறுப்பை ஏற்பவர் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தவர். தனது 30 வயதுகளில் இருக்கும் அவர் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் மீது தாக்குதல்களை நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.

“ஆப்கான், பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றின்போது ஒசாமா பின்லாடனின் மகன் மற்றும் அல் கொய்தா உயர் நிலை உறுப்பினரான ஹம்ஸா பின்லாடன் கொல்லப்பட்டார்” என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் தாக்குதல் இடம்பெற்ற காலம் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Mon, 09/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை