பொத்துவிலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் சிரமதானம்

பொத்துவில், அறுகம்பே, பாணம ஆகிய பிரதேசங்களில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகள் முறையாகப் பேணப்படாது பாணம பிரதான வீதியின் காட்டுப்பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் சுற்றாடல் பாதிக்கப்படுவதுடன் அப்பகுதிகளிலுள்ள மிருங்களும் பறவைகளும் இறக்கின்றன.

சுற்றுலாத்துறைக்கு பெயர்பெற்ற அறுகம்பே பிரதேசத்தினையும், அதனை அண்டிய பகுதிகளின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் பொருட்டு, அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சிரமதானப் பணியினை ஏற்பாடு செய்திருந்தது.

சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருப்போம், மிருகங்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இச் சிரமதான நிகழ்வு பொத்துவில் பிரதேச சபை, இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர், ரொட்ரக் - ஸ்லீட் நிறுவனம், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

சுற்றாடலை மாசுபடுத்தும் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும், பொத்துவில் பாணம பிரதான வீதியின் காட்டுப்பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் நோக்குடனேயே இவ்விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியமானது பிராந்தியத்தின் கல்வி, விளையாட்டு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு, சுற்றுலாத்துறை போன்றவற்றின் மேம்பாட்டிற்கான பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை விசேட அம்சமாகும்.

(பாலமுனை விசேட நிருபர்)

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை