செம்மலை விகாராதிபதி தகன விவகாரம் :

நீதிமன்ற தீர்ப்பை மீறி எவரும் செயற்பட முடியாது

தமிழ் மக்களின் வாக்குகள் வேண்டுமாயின் ஜனநாயகத்திற்கு மதிப்பளியுங்கள்

சமாதானத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறந்தள்ளி எவரும் செயற்பட முடியாது. நீதிமன்றம் கூறும் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாக இருக்க வேண்டும்.

நீதிக்கு அனைவரும் தலைவணங்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நீராவியடிய பிள்ளையார் ஆலயத்தின் அருகாமையில் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை குறித்து முல்லைத்தீவில் கடந்த மூன்று

நாட்களாக அமைதியின்மை நிலைமை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றில் உள்ள ஒரு விடயம் பற்றி கருத்துகளைக்கூற முடியாது. என்றாலும், சமாதானம், ஜனநாயகத்தை அனைவரும் பேண வேண்டும். நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கவோ அல்லது வித்தியாசமான கருத்துகளை வெளியிடவோ முடியாது.

நீதிமன்றம் தெளிவான தீர்ப்பொன்றை கொடுத்துள்ளது. அதனை மீறியே விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இத் தீர்ப்பு வழங்கப்பட்ட தருணத்தில் அதனை பொலிஸார் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் நீதிமன்றதைவிட்டு வெளியில் சென்றனர். ஆனால், அதே இடத்தில்தான் இவரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

நாம் தேர்தல் காலத்தை நெருங்கியுள்ளோம்.

சமாதானம், ஜனநாயகம், நீதி இந்த மூன்றும் தான் இருக்க வேண்டும். அடிப்படை வசதிகள் முதல் கலாசாரம் வரை கட்டியெழுப்ப நாம் செய்துவரும் விடயங்களை மழுங்கடிக்க இடமளிக்க முடியாது.

அதேபோன்று வாக்குகளை தவறாகவும் அச்சுறுத்தியும் பெறும் வகையில் சில அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர்.

தமிழ் வாக்குகள் வேண்டுமென்றால் ஜனநாயகத்திற்கு மதிப்பளியுங்கள்.

தமிழ் மக்களின் வாக்குகளை பயமுறுத்தியோ, இனவாதத்தை தூண்டியோ, மதவாதத்தை தூண்டியோ பெற்ற ஒரு அரசும் வரலாற்றில் இருக்கவில்லை என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை